பாகிஸ்தானில் நடந்த மனிதவெடிக்குண்டு தாக்குதலில் 9 போலீசார் பலியாகி உள்ளனர். மேலும் 15 போலீசார் படுகாயமடைந்துள்ளனர்.
தென்மேற்கு பாகிஸ்தானில் உள்ள பலுசிஸ்தான் மாகாணம் சிப்பி நகரில் இன்று போலீசார் பணி முடிந்து ஒரு வாகனத்தில் திரும்பி கொண்டிருந்தனர். அப்போது போலீசார் வந்து கொண்டிருந்த வாகனம் மீது எதிரே வந்து கொண்டிருந்த ஒரு மோட்டர் சைக்கிள் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. மோட்டர் சைக்கிளில் வந்தவர் தனது உடலில் வெடிக்குண்டுகளை கட்டிக்கொண்டு மோதினார்.
இதையும் படிக்கவும்: மணீஷ் சிசோடியாவுக்கு 20ம் தேதி வரை சிறை- நீதிமன்றம் உத்தரவு
இதுகுறித்து உயர்அதிகாரி அப்துல் ஹாய் ஆமீர் கூறுகையில், போலீசார் வந்த வாகனம் மீது மனிதவெடிக்குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்தவர் தன்மீது வெடிக்குண்டுகளை கட்டிகொண்டு வாகனம் மீது மோதியுள்ளார். இதில் போலீசார் வந்த வாகனம் கவிழ்ந்து நொறுங்கியது. இந்த மனிதவெடிக்குண்டு தாக்குதலில் 9 போலீசார் பலியானார்கள். மேலும் 15 போலீசார் படுகாயமடைந்துள்ளனர். படுகாயமடைந்த போலீசாரை மீட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இந்த மனிதவெடிக்குண்டு தாக்குதலுக்கு பலூசிஸ்தான் முதலமைச்சர் அப்துல் குதூஸ் பிசென்ஜோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் உயிரிழந்த போலீசாரின் குடும்பங்களுக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானில் சமீப காலமாக தாக்குதல்கள் அதிகரித்து வருகிறது. சமீபத்தில் மசூதி ஒன்றிலும் போலீஸ் தலைமை அலுவலகத்திலும் தாக்குதல் நடத்தப்பட்டது என்பது குறிப்பிட்டத்தக்கது. பலுசிஸ்தானில் எரிவாயு மற்றும் கனிம வளங்களை சுரண்டுவதாக குற்றம் சாட்டி போராளிகள் குழு ஒன்று அரசாங்கத்துடன் சண்டையிட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.







