கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு செல்ல 8 மாதங்களுக்கு பிறகு படகு போக்குவரத்து தொடங்கியுள்ளதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் கடந்த 2000-ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் 1-ந்தேதி கடலின் நடுவே திருவள்ளுவர் சிலை அப்போதைய முதலமைச்சர் கருணாநிதியால் நிறுவப்பட்டது. கடல்மட்டத்திலிருந்து 30 அடி உயரம் கொண்ட பாறையில், 7000 டன் எடை கொண்ட இந்த சிலை 3681 மிகப்பெரிய கற்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது. திருவள்ளுவர் எழுதிய திருக்குறளின் 133 அதிகாரங்களை குறிக்கும் வகையில் சிலையின் உயரமும் 133 அடியில் நிறுவப்பட்டது.133 அடி உயரத்தில் நிறுவப்பட்டுள்ள இந்த சிலையை மாமல்லபுரம் அரசு சிற்ப கல்லூரியின் முன்னாள் முதல்வர் கணபதி ஸ்தபதி செதுக்கினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த சிலையை 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை சீரமைத்து, ரசாயன கலவை பூச வேண்டும் என்று சிற்பி கணபதி ஸ்தபதி அறிவுரை வழங்கினார். அதன்படி, கடந்த 2000-ம் ஆண்டில் திறக்கப்பட்ட இந்த சிலை 2004, 2008, 2011, 2017 ஆகிய ஆண்டுகளில் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை புனரமைக்கப்பட்டு ரசாயன கலவை பூசப்பட்டது. கடைசியாக 2017 -ஆம் ஆண்டு ரசாயன கலவை பூசப்பட்டது.
தற்போது சிலை சீரமைக்கப்பட்டு 4 ஆண்டுகள் நிறைவடைந்து விட்ட நிலையில் கடந்த ஜூன் மாதம் 6-ந்தேதி திருவள்ளுவர் சிலை பராமரிப்பு பணிக்காக 1 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு பராமரிப்பு பணிகள் ஆரம்பமானது. கடந்த 8 மாதங்களாக நடைபெற்று வந்த புனரமைப்பு பணி நிறைவடைந்ததையடுத்து இன்று முதல் படகு போக்குவரத்து தொடங்கப்பட்டது. திரளான சுற்றுலா பயணிகள் படகில் சென்று திருவள்ளுவர்
சிலையை கண்டு ரசித்தனர்.
- பி.ஜேம்ஸ் லிசா