குன்னூரில் சுற்றுலா பேருந்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 8பேர் உயிரிழந்துள்ள நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து நிவாரணம் அறிவித்துள்ளார்.
குன்னூர் மேட்டுபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் தென்காசியில் இருந்து உதகையை சுற்றி பார்த்து திரும்பிய தனியார் சுற்றுலா பேருந்து மரப்பாலம் அருகே ஒன்பதாவது கொண்டை ஊசி வளைவில் 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
30-க்கும் மேற்பட்டோர் பலத்த காயங்களுடன் கோவை அரசு மருத்துவமனைக்கு 108ஆம்புலன்ஸ் வாகனங்கள் மூலம் கொண்டு செல்லும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் பேருந்து விபத்தில் சிக்கிய மற்ற நபர்களை காவல்துறையினர் தீயணைப்பு துறையினர் உதவியுடன் தேடும் பணி தீவிரமடைந்துள்ள நிலையில் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு என மருத்துவ வட்டாரம் தெரிவித்துள்ளது.
குன்னூர் மேட்டுப்பாளையம் மலை பாதையில் ஏற்பட்ட பேருந்து விபத்து காரணமாக போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் உதகை மற்றும் குன்னூரில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லக்கூடிய வாகனங்கள் மேட்டுப்பாளையம் வழியாக இயக்க காவல்துறையினர் வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
மேலும் பேருந்து விபத்து தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்து குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு நிவாரணம் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது..
” தென்காசி மாவட்டத்திலிருந்து உதகமண்டலத்திற்கு தனியார் பேருந்து மூலம் சுற்றுலாவிற்கு சென்றவர்கள் இன்று (30-9-2023) தென்காசிக்கு திரும்பும் வழியில், சுற்றுலாப் பேருந்து நீலகிரி மாவட்டம், குன்னூர், பர்லியாறு அருகே வந்துகொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக பள்ளத்தில் விழுந்த ஏற்பட்ட விபத்தில் பேருந்தில் பயணம் செய்த முப்புடாதி (வயது 67), முருகேசன் (வயது 65), இளங்கோ (வயது 64), தேவிகலா (வயது 42), கௌசல்யா (வயது 29) மற்றும் நிதின் (வயது 15) ஆகியோர் உள்ளிட்ட எட்டு பேர் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.
சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் விபத்து நடந்த இடத்தில் நடைபெற்றுவரும் மீட்பு மற்றும் நிவாரணப்பணிகளை மேற்பார்வையிட்டு துரிதப்படுத்தவும், மேலும் இவ்விபத்தில் படுகாயம் மற்றும் லேசான காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு சிறப்பு சிகிச்சை வழங்கவும் அறிவுறுத்தியுள்ளேன்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆறுதலையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா இரண்டு இலட்சம் ரூபாயும், படுகாயமடைந்து சிகிச்சை பெற்றுவருபவர்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபாயும், லேசான காயமடைந்து சிகிச்சை பெற்றுவருபவர்களுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட உத்தரவிட்டுள்ளேன்.” என தெரிவித்துள்ளார்.







