எட்டு புதிய மாவட்டங்கள் உருவாக்குவதற்கான கோரிக்கைள் பெறப்பட்டிருப்பதாகவும், முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று நிதிநிலைக்கு ஏற்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில் பேசிய ஆரணி சட்டமன்ற உறுப்பினர் சேவூர் ராமச்சந்திரன், திருவண்ணாமலை மாவட்டத்தில் 860 ஊராட்சிகள், 10 பேரூராட்சிகள், 4 நகராட்சிகள், 18 ஒன்றியங்கள், 12 வட்டங்கள் ஆகியவை நிர்வாக ரீதியாக செயல்பட்டு வருகின்றன. பெரிய பரப்பளவு கொண்ட மாவட்டமாக உள்ள திருவண்ணாமலையை பிரிக்க வேண்டியது அவசியமாக உள்ளது. எனவே செம்பாக்கம், வந்தவாசி, செய்யாறு, ஆரணி, போளூர் ஆகிய பகுதிகளை பிரித்து ஆரணியை தலைமை இடமாகக் கொண்டு ஒரு மாவட்டத்தை உருவாக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதற்கு பதில் அளித்த வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், ஒரு மாவட்டத்தை உருவாக்குவதற்கான சட்ட ரீதியான தகுதிகளை பூர்த்தி செய்யாததால் ஆரணியை தலைமையிடமாகக் கொண்டு மாவட்டம் உருவாக்க முடியாது எனவும், 8 மாவட்டங்களை பிரிக்க வேண்டும் என எம்எல்ஏக்கள், எம்பிக்கள் கடிதம் மூலமாக கோரிக்கை விடுத்துள்ளதாகவும், ஆர்டிஓ அலுவலகம், தாலுகா அலுவலகம் ஆகியவை உருவாக்கப்பட வேண்டியிருந்தால், நிதி நிலைமைக்கு ஏற்ப முதல் முயற்சியுடன் கலந்து பேசி முடிவு செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.
இதையும் படியுங்கள் : ”நீங்களும் மழையாகுங்களேன்…!” – கவிஞர் வைரமுத்து அட்வைஸ்
மீண்டும் பேசிய சேவூர் ராமச்சந்திரன், 8500 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட திருவண்ணாமலை மாவட்டத்தில் 20 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். மாவட்டத்தின் ஒரு எல்லையில் இருந்து திருவண்ணாமலைக்கு செல்வதற்கு அதிகபட்சம் 120 கிலோமீட்டர் வரை பயணிக்க வேண்டி உள்ளது. இதனால் அரசு ஊழியர்கள், பொதுமக்கள், வியாபாரிகள் மாவட்ட அலுவலகங்களுக்கு செல்வதற்கு 2-3 மணி நேரம் பயணிக்க வேண்டி உள்ளது. எனவே புதிய மாவட்டமாக பிரிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
அதற்கு மீண்டும் பதில் அளித்த வருவாய்துறை அமைச்சர், மாவட்டத்தில் ஒரு எல்லை முதல் மற்ற எல்லை வரை செல்வதற்கு நீண்ட தொலைவு ஆகிறது. முதலமைச்சர் உடைய கவனத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு தற்போதைய நிதி சூழலுக்கு ஏற்ப நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் சட்டப்படி மாவட்டத்தை பிரிப்பதற்கான தகுதியை பூர்த்தி செய்யவில்லை என்றும் தெரிவித்தார்.