திருமணத்திற்காக வெளியூர் சென்ற ஓய்வுபெற்ற அரசு ஓட்டுநர் வீட்டில் 75 சவரன் நகை மர்ம நபர்களால் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை பெரியார் நகரில் வசிக்கும் ஓய்வு பெற்ற அரசு ஓட்டுநர் சின்னத்துரை அவரது மனைவி மனோன்மணியம் வசித்துவருகின்றனர். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் ஒருவர் இருக்கின்றனர். சின்னதுரை – மனோன்மணியம் இடையே மனக்கசப்பு இருந்தபோதும் இவர்கள் தங்களது மகளின் திருமணத்தை ஒன்றாக சேர்ந்தே ஏற்பாடு செய்துள்ளனர்.
திருமண ஏற்பாடுகள் முடிந்த நிலையில் சனிக்கிழமை இரவு வரை உறவினர்கள் அனைவருடனும் வீட்டில் இருந்துள்ளனர். திருமணம் காரைக்குடியில் நடக்க இருந்ததால் அனைவரும் இரவே வீட்டை பூட்டிவிட்டு காரைக்குடிக்கு புறப்பட்டுள்ளனர். திருமணம் முடிந்த நிலையில் நேற்று காலை சின்னதுரையில் சகோதரர் வீடு திரும்பியுள்ளார். அப்போது கதவுகள் உடைக்கப்பட்டு வீட்டின் பூஜை அறை மற்றும் பீரோ உடைக்கப்பட்டிருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
தொடர்ந்து பீரோவில் இருந்த 75 சவரன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த காவல்துறைக்கு சின்னதுரை குடும்பத்தினர் தகவல் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்ந்து வீட்டிற்கு வந்து சோதனை செய்த போலீஸார் மோப்ப நாய்களை கொண்டுவந்து தீவிரமாக தடயங்களை தேடினர். இதன்மூலமாக நகை கொள்ளையடிக்கப்பட்டதுடன் வீட்டில் பொறுத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவும் கொள்ளையர்களால் திருடப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து எப்ஐஆர் பதிவுசெய்த போலீஸார் 121 சவரண் நகை திருடப்பட்டுள்ளதாக பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமண வீட்டில் மர்ம நபர்கள் நடத்திய இந்த திடீர் திருட்டு அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தங்க நகையை திருடிச் சென்றவர்கள் சிசிடிவி கேமராவையும் சேர்த்து திருடிச் சென்றுள்ளது இந்த சம்பவத்தில் போலீஸாருக்கு இருக்கும் சவாலை கூட்டியுள்ளது.








