நியூசிலாந்தில் உள்ள கெர்மடெக் தீவுகளில் 7.1 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் இன்று ஏற்பட்டதை அடுத்து, 300 கிமீ சுற்றளவில், மக்கள் வசிக்காத தீவுகளுக்கு சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுக்க கடந்த சில நாட்களாகவே அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகின்றன. கடந்த 3 நாட்களுக்கு முன்பு தான் நியூசிலாந்தில் வெலிங்டன் மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில் 6.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில் இன்று,
நியூசிலாந்தின் வடக்கே உள்ள கெர்மடெக் தீவுகளில் இன்று 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் காரணமாக இதுவரை சேதங்கள் ஏற்பட்டதா என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.
அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் கூற்றுப்படி, இந்த நிலநடுக்கம் 10 கிமீ ஆழத்தில் இருந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது. 300 கிமீ சுற்றளவில் அருகிலுள்ள, மக்கள் வசிக்காத தீவுகளுக்கு அமெரிக்க சுனாமி எச்சரிக்கை அமைப்பால், சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த நிலையில், தற்போது மீண்டும் ஏற்பட்டுள்ள நிலநடுக்கத்தால், நியூசிலாந்தில் மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு எந்தவித பாதிப்போ, சுனாமி அச்சுறுத்தல் பயமோ ஏதும் இல்லை என்று தேசிய அவசரகால மேலாண்மை நிறுவனம் தெரிவித்துள்ளது.
நியூசிலாந்து உலகின் இரண்டு முக்கிய டெக்டோனிக் தட்டுகளான பசிபிக் தட்டு மற்றும் ஆஸ்திரேலிய தட்டு ஆகியவற்றின் எல்லையில் அமைந்திருப்பதால் நிலநடுக்கங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. இது ரிங் ஆஃப் ஃபயர் என்று அழைக்கப்படும் தீவிர நில அதிர்வு நடவடிக்கை மண்டலத்தின் விளிம்பிலும் உள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் நியூசிலாந்தில் ஆயிரக்கணக்கான நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன. இந்த நிலையில், நியூசிலாந்தின் வடக்கே உள்ள கெர்மடெக் தீவுகளில் இன்று 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது போலவே, நம் அண்டை நாடான பாகிஸ்தானிலும் அதிகாலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், அது 4.2 என்ற ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
https://twitter.com/NZcivildefence/status/1636184888247214080?s=20
- பி.ஜேம்ஸ் லிசா








