இஸ்ரேலில் இருந்து 49 தமிழர்கள் ஆபரேஷன் அஜய் மற்றும் தமிழ்நாடு அரசின் சார்பிலும், 12 தமிழர்கள் தங்கள் சொந்த செலவிலும் தமிழ்நாடு வந்தடைந்துள்ளனர் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் இருந்து ஹமாஸ் படையினர் இஸ்ரேல் மீது அக்டோபர் 7-ம் தேதி காலை ராக்கெட்டுகளை வீசியும், இஸ்ரேலுக்கு நுழைந்தும் திடீா் தாக்குதல் நடத்தினர். இதன்பின்னர் பதிலடியாக இஸ்ரேலும் பதிலுக்கு நடத்தியதில் இரண்டு நாடுகளிலும் 3000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 9000க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதன் பின்னர் இஸ்ரேல், போர்ப் பிரகடனம் அறிவித்து நடத்திய பதிலடி தாக்குதல் நடத்தியதில் காஸா பகுதியில் மின்சாரம், தண்ணீர் மற்றும் எல்லை ஆகியவற்றை தடை செய்தது. இஸ்ரேல் மீதான ஹமாஸ் படையின் தாக்குதலுக்கு இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. அதேபோல போர் பிரகடணம் அறிவித்துள்ள இஸ்ரேலுக்கும் கண்டனங்கள் வலுத்து வலுகிறது.
ரஷ்யா, ஈரான், சவூதி உள்ளிட்ட நாடுகள் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தி போரை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர். காஸா எல்லைப் பகுதியில் துப்பாக்கிச் சண்டை 8வது நாளாக தொடா்ந்து வருகிறது. இந்நிலையில் இஸ்ரேலில் இருந்து 49 தமிழர்கள் ஆபரேஷன் அஜய் மற்றும் தமிழ்நாடு அரசின் சார்பிலும், 12 தமிழர்கள் தங்கள் சொந்த செலவிலும் தமிழ்நாடு வந்தடைந்ததாக தமிழ்நாடு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “இஸ்ரேல் போர் தற்போது தீவிரமடைந்த நிலையில், முதலமைச்சர் ஆணைக்கினங்க தமிழ்நாடு அரசின் சார்பில் அறிவிக்கப்பட்ட உதவி எண்கள் மூலம் அங்கு சிக்கித் தவித்த 128 தமிழர்களின் தகவல்கள் அறியப்பட்டது. இவர்களில் நேற்று முதற்கட்டமாக புதுடெல்லி வந்த 21 தமிழர்கள் அவர்களது இல்லம் வரை, தமிழ்நாடு அரசின் சார்பில் அழைத்து வரப்பட்டனர்.
இந்நிலையில் இரண்டாம் கட்டமாக இன்று மதுரை, திண்டுக்கல், கரூர், தென்காசி, தருமபுரி, திருப்பூர், திருவண்ணாமலை, திருச்சி, சென்னை, விழுப்புரம், திருப்பத்தூர், சேலம், கோயம்பத்தூர் முதலிய மாவட்டங்களைச் சேர்ந்த 28 தமிழர்கள் இஸ்ரேலில் இருந்து சிறப்பு விமானத்தில் இன்று காலை 06.00 மணிக்கு புது டெல்லி வந்தடைந்தனர்.
புது டெல்லி விமான நிலையத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் அவர்களை வரவேற்று அவர்களுக்கு காலை உணவு ஏற்பாடுகள் செய்யப்பட்டு, தமிழ்நாடு அரசு செலவில் விமான பயண சீட்டுகளும் ஏற்பாடு செய்யப்பட்டது. இவர்களில் 16 தமிழர்கள் சென்னை விமான நிலையத்திற்கும், 12 தமிழர்கள் கோயம்பத்தூர் விமான நிலையத்திற்கும் வந்தடைந்தனர். மேலும் அரசின் தரப்பில் அவர்கள் சொந்த மாவட்டங்கள் செல்ல வாகனங்களும் ஏற்பாடு செய்யப்பட்டது.
சென்னை விமான நிலையத்திற்கு வந்தடைந்த 16 தமிழர்களை தமிழ்நாடு அரசின் சார்பில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான், அயலகத் தமிழர் நலத்துறை ஆணையர் ஜெசிந்தா லாசரஸ் மற்றும் துறை அலுவலர்கள் வரவேற்று, அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தனர்.
கோயம்புத்தூர் விமான நிலையம் வந்தடைந்த 12 தமிழர்களையும், கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் வரவேற்று அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தார். இதுவரை, இஸ்ரேலில் இருந்து 49 தமிழர்கள் ஆபரேஷன் அஜய் மற்றும் தமிழ்நாடு அரசின் சார்பிலும், 12 தமிழர்கள் தங்கள் சொந்த செலவிலும் தமிழ்நாடு வந்தடைந்துள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள, News7 Tamil – ன் WhatsApp Channel– ல் இணைய – க்ளிக் செய்யுங்கள்!