பல ஊடகங்களில் பரபரப்பாக வரும் என்னைப் பற்றிய ஒரு செய்திக்குத் தன்னிலை விளக்கம் அளிக்க வேண்டியது என் கடமை.
இயக்குனர் லிங்குசாமி நான் ஈ, இரண்டாம் உலகம் படங்களைத் தயாரித்த பி.வி.பி. பைனான்ஸ் நிறுவனத்திடமிருந்து 2014-ல் நடிகர் கார்த்தி, நடிகை சமந்தா நடிப்பில் “எண்ணி ஏழு நாள்” என்ற படத்தைத் தயாரிப்பதற்காக, ஒரு கோடியே 3 லட்சம் ரூபாய் தொகையைத் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்திற்காகக் கடனாகப் பெற்றுள்ளார்.
அப்போது கொடுத்த 35 லட்சம் ரூபாய்க்கான காசோலைக்கு லிங்குசாமி வங்கி கணக்கில் பணமில்லாமல் திரும்பியதால், பிவிபி நிறுவனம் தரப்பில் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் காசோலை மோசடி வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் இன்று சைதாப்பேட்டை 3-வது விரைவு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதி சந்தோஷ், இயக்குனர் லிங்குசாமிக்கு 6 மாதங்கள் சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தார்.
பிவிபி நிறுவனத்திடம் பெற்ற கடனை வட்டியுடன் சேர்த்துத் திருப்பி செலுத்த வேண்டுமெனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் லிங்குசாமி மேல்முறையீடு செய்ய உள்ளதாகக் கூறி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் லிங்குசாமி. அதில் “பல ஊடகங்களில் பரபரப்பாக வரும் என்னைப் பற்றிய ஒரு செய்திக்குத் தன்னிலை விளக்கம் அளிக்க வேண்டியது என் கடமை. இந்த வழக்கு பிவிபி கேப்பிடல் லிமிடெட் மற்றும் எங்களது தயாரிப்பு நிறுவனமான திருப்பதி பிரதர்ஸ் பிலிம் மீடியா பிரைவேட் லிமிடெட் இடையிலானது. அவர்கள் தொடுத்த வழக்கின் மேல் இன்று மாண்புமிகு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. நாங்கள் இன்று மாண்புமிகு நீதிமன்றம் அளித்த தீர்ப்பிற்கு எதிராக உடனடியாக மேல் முறையீடு செய்து சட்டரீதியாக சந்திக்க உள்ளோம்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.







