பிரதமர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு டெல்லியில் உள்ள ஒரு உணவகம், 56 உணவுகள் அடங்கிய சிறப்புத் தாளியை அறிமுகப்படுத்தியுள்ளது.
பிரதமர் மோடியின் 72வது பிறந்தநாள் நாடு முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், டெல்லியில் உள்ள உணவகம் ஒன்றில் பிரதமரின் தனித்துவத்தை விளக்கும் வகையில், 56 உணவுகள் அடங்கிய சிறப்புத் தாளியை உணவை அறிமுகப்படுத்தியுள்ளது, 56 அங்குல மார்பு கொண்டவன் என பிரதமர் கூறியதை நினைவுப்படுத்தும் விதமாக கன்னாட்டில் அமைந்துள்ள ஆர்டார் 2.1 என்ற உணவகம் இவ்வாறு செய்துள்ளது.
இன்று முதல், இந்த உணவு தட்டு ’56 இன்ச் மோடி ஜி தாளி’ என்று பெயரிடப்பட்டு உணவு வழங்கப்படும் என்று அந்த உணவகம் தெரிவித்து இருக்கிறது. இதுபற்றி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அந்த உணவகத்தின் உரிமையாளர் சுமித் கலாரா, “பிரதமர் மோடியை நான் மிகவும் மதிக்கிறேன், அவருடைய பிறந்தநாளில் அவருக்கு தனித்துவமான ஒன்றை வழங்க விரும்பும் வகையில் செய்யப்பட்டது தான் இந்த ஏற்பாடு. நாங்கள் அவரை அழைக்க முடியாது. ஒருவேளை நாங்கள் அவரை அழைத்தாலும் பாதுகாப்பு காரணங்களால் அவரால் வர முடியாமல் போகலாம். இது பிரதமரின் ரசிகர்களுக்கானது” என்று தெரிவித்தார்.
அதுமட்டுமல்லாமல் இன்று முதல் வரும் 26ம் தேதி வரை உணவகத்திற்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு சிறப்பு சலுகை அறிக்கப்பட்டுள்ளது. அதில், 40 நிமிடங்களுக்குள் தாளியை முடிக்கும் நபருக்கு 8.5 லட்சம் பரிசுத் தொகையும், கேதார்நாத்திற்கு செல்லும் வாய்ப்பையும் பெறுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.







