திருவாரூர் மாவட்டத்தில் அனைத்து துறை அதிகாரிகள் இணைந்து 33 சதவீதத்திற்கும் மேல் வனப்பரப்பை உயர்த்த வேண்டும் என உணவுத்துறை அமைச்சர் அறிவுறுத்தினார்.
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து துறை வளர்ச்சி திட்ட பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காயத்ரி தலைமையில் நடைபெற்றது. இதில் தமிழக உணவு மற்றும் உணவு உணவுப் பொருள் வாங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார். இதில் மாவட்டம் முழுவதிலும் இருந்து பல்வேறு துறைகளை சேர்ந்த நூற்றுக்கு மேற்பட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பேசிய உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, மரத்தை நாம் வளர்த்தால் மரம் நம்மை வளர்க்கும் என முத்தமிழ் அறிஞர் கலைஞர் கூறியிருக்கிறார். அதன் அடிப்படையில் வேளாண்துறை, நெடுஞ்சாலை துறை, வனத்துறை, தோட்டக்கலைத்துறை, அறநிலை துறை ஆகிய பல்வேறு துறைகளை இணைத்து மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஒரு குழுவை அமைத்து சீமை கருவேல மரங்களை அகற்றி அதற்கு பதிலாக நாட்டு மரங்களை நட வேண்டும்.
மரங்களை நடுவது மட்டும் போதாது. அதனை பேணி பாதுகாத்து தினமும் தண்ணீர் ஊற்ற வேண்டும். இதனை அந்தந்த பகுதியில் உள்ள அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும். தமிழக முதலமைச்சர் இந்த மாநிலத்தை பசுமை தமிழகமாக மாற்ற முயற்சி மேற்கொண்டு வருகிறார். திருவாரூர் மாவட்டத்தில் 33 சதவீதத்திற்கும் மேல் வனப்பரப்பை உயர்த்த வேண்டும். சாலை ஓரங்களில் அரசு புறம்போக்கு நிலமாக இருந்தாலும், வேறு எந்த நிலமாக இருந்தாலும் சாலை ஓரங்களில் நெடுஞ்சாலைத் துறையினர் மரங்களை வளர்க்க வேண்டும் என அறிவுறுத்தினார்.







