மின்சாரம் பாய்ந்து 3 பேர் உயிரிழப்பு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவிப்பு!

விருதுநகரில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலா மூன்று லட்சம் நிவாரணம் வழங்கி உத்தரவிட்டுள்ளார்.

விருதுநகர் மாவட்டம், காரிசேரி கிராமத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழ்நாடு அரசு சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில்,

“விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், காரிசேரி கிராமம், வடக்குத் தெருவில் அமைந்துள்ள மாரியம்மன் கோவில் பொங்கல் மறுபூஜைக்காக நேற்று 14.4.2025 மாலை சுமார் 3.10 மணியளவில் ரேடியோ அமைக்கும் பணியின்போது அருகில் உள்ள டிரான்ஸ்பார்மர் வயரின் மீது மின்சார வயர் பட்டதில் ரேடியோ அமைக்கும் பணியை மேற்கொண்ட காரிசேரி கிராமத்தைச் சேர்ந்த திருப்பதி (வயத 27) த/பெராமர் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மேலும், இந்த சம்பவம் உயிரிழந்த திருப்பதியின் வீட்டிற்கு அருகில் நிகழ்ந்ததால் அவருடைய மனைவி லலிதா (வயது 25) மற்றும் பாட்டி பாக்கியம் (வயது 75) ஆகியோர் திருப்பதி என்பவரை காப்பாற்ற முயன்றபோது இருவர் மீதும் மின்சாரம் பாய்ந்ததில் அவர்களும் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

மேலும், இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா மூன்று லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.