இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் நாக்பூரில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இதையும் படிக்கவும்: திருடிய வீட்டில் அசந்து தூங்கிய கொள்ளையன்! காலையில் தட்டி எழுப்பிய போலீஸ்
நாக்பூரில் நடந்த தொடக்க டெஸ்ட் போட்டியில் ஆடுகளம் சுழல்பந்து வீச்சுக்கு ஏதுவாக அமைந்தது. இதில் அஸ்வின், ரவீந்திர ஜடேஜாவின் சுழல் பந்துவீச்சு தாக்குதலை சமாளிக்க முடியாமல் திண்டாடிய ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 177 ரன்னிலும், 2-வது இன்னிங்சில் 91 ரன்னிலும் சுருண்டது.
முதல் இன்னிங்சில் கேப்டன் ரோகித் சர்மாவின் அபார சதம் மற்றும் ஜடேஜா, அக்ஷர் பட்டேலின் அரை சதத்தால் 400 ரன்களை இந்தியா குவித்தது. இதனால் இந்திய அணி 132 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி தலைநகர் டெல்லியில் உள்ள அருண்ஜெட்லி ஸ்டேடியத்தில் இன்று நடக்கிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதன்படி இந்திய அணி முதலில் பந்து வீசுகிறது.








