தமிழ்நாடு முழுவதும் 13 வது மெகா தடுப்பூசி முகாம் இன்று நடக்கிறது.
தமிழ்நாடு அரசு கடந்த செப்டம்பர் மாதம் முதல், மெகா தடுப்பூசி முகாமை நடத்தி வருகிறது. தற்போது ஒமிக்ரான் தொற்று மக்களை அச்சுறுத்தி வரும் சூழலில், அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட வேண்டும் என மருத்துவ வல்லுநர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனையடுத்து கூடுதலான எண்ணிக்கையில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில், 13-வது கட்டமாக இன்று கொரோனா தடுப்பூசி மெகா முகாம்கள் மாநிலம் முழுவதும் நடைபெறுகிறது.
காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் இந்த தடுப்பூசி முகாமில், காலக்கெடு முடிந்தும் 2-வது தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. அந்த வகையில் இதுவரை தமிழ்நாட்டில் 83 லட்சம் பேர் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாமல் இருக்கின்றனர்.
சென்னையில் மட்டும் இன்று 200 வார்டுகளில் ஆயிரத்து 600 மையங்களில் தடுப்பூசி செலுத்தப் படவுள்ளது. இந்த சிறப்பு முகாம்களில் 2 லட்சம் தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், 2ம் தவணை தடுப்பூசி போடவேண்டியவர்கள் கட்டாயம் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் எனவும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் அறிவுறுத்தப் பட்டுள்ளது.