இரு நாடுகளுக்கு இடையேயான கமாண்டர் மட்டத்திலான 12வது கட்ட பேச்சுவார்த்தையின்போது கோக்ரா ஹைட்ஸ், ஹாட் ஸ்பிரிங்க்ஸ் பகுதிகளில் படைகளை விலக்கிக்கொள்வது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது.
சீனா உடனான எல்லைப் பிரச்னை கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு அதிகரித்தது. சீனா ராணுவம் இந்திய எல்லையில் பாங்காங் ஏரிக்கு அருகே ஊடுருவியது. ஊடுருவிய சீன வீரர்களை இந்திய ராணுவம் விரட்டியடித்தது.இதனால், இரு நாடுகளுக்கு இடையே போர் மூளும் சூழல் ஏற்பட்டது. இதன் பின்னர் இருநாடுகளுக்கு இடையே அரசியல் ரீதியிலும், ராணுவ அதிகாரிகள் மட்டத்திலும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன.
பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து இருநாடுகளும் படைகளை விலக்கிக் கொள்வது என்று ஒப்புக்கொண்டன. அதன்படி பாங்காங் ஏரி பகுதியில் இருந்து படைகள் விலக்கிக் கொள்ளப்பட்டன. மேலும் சில பகுதிகளில் படைகளை விலக்கிக் கொள்வது குறித்து இது வரை இரண்டு நாடுகளுக்கும் இடையே 11 முறை கமாண்டர் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. 12வது முறையாக எல்லைக்கட்டுப்பாடு கோடு அருகே சீன பகுதியில் உள்ள மோல்டோ என்ற இடத்தில் இரண்டு நாடுகளில் கமாண்டர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையின்போது, கோக்ரா ஹைட்ஸ், ஹாட் ஸ்பிரிங்க்ஸ் ஆகிய பகுதிகளில் இருந்து இருநாடுகளும் படைகளை விலக்கிக் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.







