நாளை முதல் வார இறுதி விடுமுறை நாட்கள், விழா கால விடுமுறை நாட்களிலும் நிறுவனங்கள் ஊழியர்களின் சம்பளத்தை வங்கிகளில் வரவு வைக்கும் வகையில் ரிசர்வ் வங்கியின் விதிமுறையில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.
வங்கிகளின் வாயிலாக முக்கியமான பணப் பரிமாற்றங்கள் மேற்கொள்வதற்கு சனி,ஞாயிறு விடுமுறை நாட்கள், வங்கி விடுமுறை நாட்கள் ஆகியவற்றின் போது அனுமதி இல்லாமல் இருந்தது. இப்போது ஆர்டிஜிஎஸ் எனப்படும் இணையதள பரிமாற்றங்கள், ஐஎம்பிஎஸ் என்ற மொபைல் வழி பணப் பரிமாற்றங்களை எப்போது வேண்டுமானாலும் மேற்கொள்ள முடியும்.
பெருநிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு சம்பளக் கணக்கு வைத்திருக்கும் வங்கிகள் வாயிலாக நேஷனல் ஆட்டோமேட்டட் கிளியரிங் ஹவுஸ் எனப்படும் வங்கி கிளியரன்ஸ் முறையில் சம்பளம் கிரெடிட் செய்கின்றன. இதனை இப்போது அலுவலக நேரத்தில் மட்டுமே மேற்கொள்ள முடியும் என்ற நிலை இருந்தது.
இதில் இப்போது மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி நாளை முதல் நேஷனல் ஆட்டோமேட்டட் கிளியரிங் ஹவுஸ் எனப்படும் பணப்பரிமாற்ற முறையில் 24 மணி நேரமும் பணப்பரிமாற்றம் செய்ய முடியும்.
இந்த நடைமுறை அமலுக்கு வரும் போது வங்கிகளின் வாயிலாக சம்பளம் தரும் நிறுவனங்கள் இனி சனி,ஞாயிறு விடுமுறை நாட்களிலும் வங்கி விடுமுறை நாட்களிலும், பண்டிகை விடுமுறை நாட்களிலும் கூட வங்கிகளில் தங்கள் ஊழியர்களுக்கான சம்பளத்தை வரவு வைக்க முடியும்.
அதே போல வங்கி கடன்களுக்கான இஎம்ஐ தொகையையும் இனிமேல் விடுமுறை நாட்களில் டெபிட் செய்வதற்கும் இதன் மூலம் அனுமதி அளிக்கப்படுகிறது.
சம்பளம் தவிர பொதுத்துறை நிறுவனங்கள், அரசு ஊழியர்கள், முன்னாள் ராணுவத்தினர் உள்ளிட்டோரின் பென்ஷன் தொகையையும் இனி விடுமுறை தினங்களில் வங்கிகளில் வரவு வைக்க முடியும் நிலை ஏற்பட்டுள்ளது.







