புனே அருகே ரசாயனத் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 12 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் இருந்து 40 கி.மீ தொலைவில் உள்ளது, உராவாடே இண்டஸ்ட்ரியல் எஸ்டேட் பகுதி. இங்கு தனியாருக்குச் சொந்தமான எஸ்விஎஸ் ஆகுவா டெக்னாலஜி என்ற ரசாயனத் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இன்று மாலை அங்கு திடீரென தீவிபத்து ஏற்பட்டது.
இதையடுத்து தீயணைப்பு படையினருக்கும் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. 8 வாகனத்தில் வந்த தீயணைப்பு வீரர்கள், தீயை போராடி அணைத்தனர்.
இந்த தீ விபத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அனைவரும் பெண் தொழிலாளர்கள் என்றும் தீயணைப்புத் துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் மாயமான ஐந்து பேரை தேடும் பணி நடந்து வருகிறது. பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் அஞ்சப்படுகிறது. இந்த சம்பவம் அந்தப் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.







