12 மணி நேர கட்டாய வேலை திருத்தச் சட்டத்தை தமிழ்நாடு அரசு திரும்பப் பெற வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
தனியார் நிறுவனங்களில் பணியாளர்களின் வேலை நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்த வகை செய்யும் சட்டத்திருத்த மசோதா, சட்டப்பேரவையில் பல எதிர்ப்புகளுக்கு இடையே நிறைவேற்றப்பட்டது. தனியார் நிறுவனங்களில் வேலைநேரத்தை 12 மணிநேரமாக உயர்த்தி, தொழிலாளர் சட்ட விதிகளில் மத்திய அரசு மாற்றம் கொண்டு வந்தது.
அதன்படி, தமிழ்நாடு சட்டப்பேரவையில் இந்த சட்டத்திருத்த மசோதாவை அமைச்சர் கணேசன் தாக்கல் செய்தார். தொழிலாளர்கள் தினசரி 12 மணி நேரம் வேலை செய்வதற்கு வழிவகை செய்யும் சட்ட மசோதாவுக்கு பல்வேறு கட்சி தலைவர்களும், பொதுமக்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படியுங்கள் : 12 மணி நேர வேலை மசோதா; தொழிற்சங்கங்களுடன் அமைச்சர்கள் ஆலோசனை
அந்த வகையில் அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தனது கண்டனக் குரலை எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது :
“8 மணி நேர வேலை, வேலைக்கேற்ற ஊதியம் என்பதை நூறாண்டுகளுக்கும் மேலாக தொழிலாளர்கள் தங்களது அடிப்படை உரிமையாக கடைபிடித்து வருகிறார்கள். கடந்த 2020-ஆம் ஆண்டில் மத்திய அரசு தொழிலாளர் வேலை சட்டத்தில் ஒரு திருத்தம் கொண்டு வந்தது. வாரத்தில் 4 நாட்கள் குறைந்தபட்சம் 48 மணி நேர வேலை, 3 நாட்கள் விடுமுறை என்பது அந்தச் சட்டத்தின் ஷரத்து.
தகவல் தொழில்நுட்ப துறைகளிலெல்லாம் 8 மணி நேரத்திற்கு மேல் வேலை வாங்குவதாலும், உரிய சம்பளம் தராமல் இருப்பதாலும் பணியாளர்களின் உரிமையை நிலைநாட்ட இந்தச் சட்டம் கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. ஒவ்வொரு மாநில அரசும் அவர்களின் விருப்பத்திற்கேற்ப இந்தச் சட்டத்தை நிறைவேற்றிக் கொள்ளலாம் என்றும் தெரிவித்திருந்தது. அப்போது, எதிர்க்கட்சித் தலைவராக இருந்த தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்தச் சட்டத்தை எதிர்த்தார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அன்று வெளியிட்ட அறிக்கையை, இன்று அவரே படித்துப் பார்க்க வேண்டும். 12 மணி நேர கட்டாய வேலை திருத்தச் சட்டத்தை தமிழக சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒருதலைபட்சமாக நிறைவேற்றியதை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன்.
திமுக அரசு செய்யும் அனைத்து செயல்களையும் ஆதரிக்கும் அதன் கூட்டணிக் கட்சிகளே, இந்த சட்டத்தை எதிர்த்துப் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்திருப்பது, இந்த அரசின் தொழிலாளர் விரோதப் போக்கை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
- நீட் பிரச்சனையா? மத்திய அரசை கைகாட்டுவது
- பெட்ரோல், டீசல் விலை உயர்வா? தன்பொறுப்பை தட்டிக் கழித்து மத்திய அரசை கைகாட்டுவது
- மின் கட்டண உயர்வா? மத்திய அரசை துணைக்கு அழைப்பது
- வீட்டு வரி, சொத்து வரி உயர்வா? மத்திய அரசு உத்தரவிட்டதால் செய்கிறோம் என்று சொல்வது
- தேசிய நெடுஞ்சாலைத் துறையின் சாலை விரிவாக்கப் பணிகளை மேற்கொள்ள நில எடுப்பு செய்யும்போது, எதிர்க்கட்சியாக இருக்கும் போது எதிர்ப்பதும்; தற்போது ஆளும் கட்சியானவுடன், நிலங்களை வலுக்கட்டாயமாக பறிப்பது
- அதேபோல், நெய்வேலி நிலக்கரி சுரங்க விரிவாக்கத் திட்டத்திற்கு மக்களின் விளை நிலங்களை வலுக்கட்டாயமாகப் பறித்து நெய்வேலி நிலக்கரி நிறுவனத்திடம் ஒப்படைப்பது
என்று அடிமை சாசனம் எழுதிக் கொடுத்துள்ள இந்த அரசுக்கு, அதிமுகவைப் பற்றியோ, பத்தாண்டு கால தன்னலமற்ற எங்களின் மக்கள் சேவையைப் பற்றியோ குறை கூற எந்த அருகதையும் கிடையாது.
அதிமுக அரசு ஆட்சிப் பொறுப்பில் இருக்கும்போது, தமிழக மக்களுக்கு எதிரான எந்த ஒரு திட்டத்தையும் அனுமதித்ததில்லை. ஆனால், திமுக அரசு மக்கள் நலனுக்கு எதிராக செயல்படுவதை கண்மூடி வேடிக்கை பார்க்க முடியாது. ஒரு பொய்யை திரும்பத் திரும்பச் சொல்லி, அதை உண்மையாக்கிவிடலாம் என்ற தத்துவத்தைக் கடைபிடிக்கும், முதலமைச்சர் தன்னிலை உணர்ந்து மக்கள் விரோதச் செயல்பாடுகளை கைவிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள தொழிலாளர் விரோத சட்டத்தை உடனடியாக இந்த அரசு திரும்பப் பெற வேண்டும். இல்லையெனில், தமிழக தொழிலாளர்களின் நலனைக் காக்க அதிமுக எல்லா முயற்சிகளையும் மேற்கொள்ளும் என்று எச்சரிக்கிறேன்”. இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.








