சென்னையில் முகக் கவசம் அணியாதவர்களுக்கு ஒரே வாரத்தில் 12.02 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியில் கடந்த ஒரு சில நாட்களாக கோவிட் தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால், பொதுமக்கள் மார்க்கெட் பகுதிகள், அங்காடிகள், வணிக வளாகங்கள், திரையரங்கங்கள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், மருத்துவமனைகள் போன்ற பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் செல்லும் பொழுது தவறாமல் முகக்கவசம் அணிய வேண்டும் எனவும், சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும் எனவும் மாநகராட்சியின் சார்பில் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டது. மேலும், அதன்படி, முகக்கவசம் அணியாத நபர்களுக்கு, ரூ.500/- அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில் மாநகராட்சியின் குழுக்களின் மூலம் 14.07.2022 முதல் 20.07.2022 வரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் பொதுமக்கள் அதிகம் கூடுமிடங்களில் முகக்கவசம் அணியாத 2,405 நபர்களுக்கு ரூ.12,02,500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அண்மைச் செய்தி: ‘மயில் சிலை வழக்கு; 4 மாத கெடு விதித்த சென்னை உயர் நீதிமன்றம்!’
அதிகபட்சமாக கோடம்பாக்கம் மண்டலத்தில் 415 நபர்களுக்கு 2,07,500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் வெளியில் செல்லும் பொழுது அனைவரும் முகக் கவசம் அனிதல் மற்றும் சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும் எனவும், முகக்கவசம் அணியாத நபர்களுக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனவும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.








