வில்லிவாக்கத்தில் சொத்து தகராறு காரணமாக மாமனாரை, மருமகனே கழுத்தறுத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை வில்லிவாக்கம் சிட்கோ நகரை சேர்ந்தவர் 82 வயதான ஜெகநாதன். இவருடைய மகள் பிரேமலதாவும், மருமகன் குமாரும், ஜெகநாதன் வீட்டிலேயே கடந்த 4 ஆண்டுகளாக தங்கியுள்ளனர். இந்நிலையில் மாமனாருக்கு சொந்தமான வீடு ஒன்றை தன் பெயரில் மாற்றி தருமாறு கடந்த சில தினங்களாக குமார், ஜெகநாதனிடம் கேட்டுள்ளார். இதற்கு ஜெகநாதன் மறுப்பு தெரிவிக்கவே தினந்தோறும் சண்டை நடந்து வந்துள்ளது.
இந்நிலையில் நேற்று இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஆனது. இதில் வயதானவர் என்றும் பாராமல் ஜெகநாதனை அடித்து கீழே தள்ளிய குமார், வீட்டில் இருந்த கத்தியை எடுத்து ஜெகநாதனின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து பார்த்தபோது ஜெகநாதன் ரத்த வெள்ளத்தில் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வில்லிவாக்கம் காவல்துறையினர் குமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.







