‘தமிழ்நாட்டில் இதுவரை ரூ.109 கோடி பறிமுதல்’ – சத்யபிரதா சாகு!

தமிழ்நாட்டில் இதுவரை ரூ.109.79 கோடி பணம் மற்றும் பரிசு பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் வரும் 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற…

தமிழ்நாட்டில் இதுவரை ரூ.109.79 கோடி பணம் மற்றும் பரிசு பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் வரும் 19ம் தேதி ஒரே கட்டமாக
நடைபெற உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்ததை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன.  இந்நிலையில் கட்சிகள் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா,  பரிசுப் பொருட்கள் கொடுப்பதை தடுக்கும் வகையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் பறக்கும் படையினர்,  கண்காணிப்பு குழுவினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.  உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் பணம்,  பரிசு பொருள்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து வருகின்றனர்.

மேலும் “நடத்தை விதிமீறல் உட்பட தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்க ‘சி-விஜில்’ செயலியை பொதுமக்கள் பயன்படுத்தலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.  இந்தச் செயலி மூலம் பெறப்படும் புகார்களின் மீது 100 நிமிடத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்படும்.  மேலும் புகார் கொடுத்தவரின் அலைபேசி எண்ணிற்கு நடவடிக்கை எடுத்த பின் அது தொடர்பான விவரங்கள் குறுஞ்செய்தியாக அனுப்பப்படும் என்று தேர்தல் ஆணையத்தால் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் நேற்றுவரை (மார்ச்.31) ஆம் தேதி வரை இந்த செயலி மூலம் 1,822 புகார்கள் பெறப்பட்டு 1,803 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.  மேலும்  பறக்கும் படையால் இதுவரை ரூ.109 கோடி மதிப்பிலான ரொக்கம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மக்களவை தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து, தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு நாளை ஆலோசனை மேற்கொள்கிறார்.  இந்த ஆலோசனை கூட்டத்தில் வருமான வரித்துறை,  சுங்கத்துறை,  ஜிஎஸ்டி,  அமலாக்கத் துறை அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.  பறக்கும் படையால் இதுவரை ரூ.109 கோடி மதிப்பிலான ரொக்கம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில் ஆலோசனை நடைபெற உள்ளது.

வருகிற 4ஆம் தேதி,  மாவட்ட தேர்தல் அதிகாரிகள்,  காவல்துறை கண்காணிப்பாளர்களுடனும் சத்யபிரதா சாகு ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.