“அரவிந்த் கெஜ்ரிவால் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை, வழக்கை தவறாக வழிநடத்த முயல்கிறார்!” – நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை குற்றச்சாட்டு

மதுபான கொள்கை வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவால் விசாரணைக்கு ஒத்துழைக்காததோடு,  வழக்கை தவறாக வழிநடத்த முயல்கிறார் என டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ளது.  2021-22ம் ஆண்டு டெல்லியில் புதிய மதுபான கொள்கை…

மதுபான கொள்கை வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவால் விசாரணைக்கு ஒத்துழைக்காததோடு,  வழக்கை தவறாக வழிநடத்த முயல்கிறார் என டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ளது. 

2021-22ம் ஆண்டு டெல்லியில் புதிய மதுபான கொள்கை அறிவிக்கப்பட்டது.  அதாவது டெல்லியில் மதுபான விற்பனை அரசிடம் இருந்து 4 கார்ப்பரேசன்கள் கைகளுக்கு மாறின. மொத்த மது விற்பனையில் 50% இந்த 4 கார்ப்பரேசன்கள் பகுதிகளில் நடைபெறுகிறது. டெல்லி 32 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு 849 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு லைசன்ஸ் தரப்பட்டது.  இதில் ஏராளமான முறைகேடுகள் நடந்தது என்பதுதான் புகார்.

புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த அமலாக்கத்துறை 9 முறை கெஜ்ரிவாலுக்கு சம்மன் அனுப்பியது.  ஆனால், விசாரணைக்கு ஆஜராகாத கெஜ்ரிவால், டெல்லி உயர்நீதிமன்றத்தை நாடினார்.  நீதிமன்றம் கைவிட்டுவிட்டது.  இதனையடுத்து கெஜ்ரிவாலின் வீட்டில் அதிரடி ரெய்டு நடத்தி அவரை அமலாக்கத்துறை கைது செய்தது. ஏற்கெனவே ஜார்க்கண்ட் முதலமைச்சராக இருந்த ஹேமந்த் சோரனையும் சமீபத்தில்தான் அமலாக்கத்துறை கைது செய்திருந்தது.  இதனையடுத்து கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டிருப்பது கடும் விமர்சனங்களை கிளப்பியது.

இதனையடுத்து ஜெக்ரிவாலின் நீதிமன்ற காவல் இன்றுடன் நிறைவடைந்த நிலையில், அவரை டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் அமலாக்கத்துறையினர் ஆஜர்படுத்தினர். வழக்கு விசாரணையில்,

அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் (ஏஎஸ்ஜி) எஸ்.வி.ராஜு, டெல்லி நீதிமன்றத்தில் ஆஜராகி,  பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்றும் அவர் வழக்கை தவறாக வழிநடத்த முயல்கிறார் என்றும் குற்றம் சாட்டினார்.  மேலும் விஜய் நாயருக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் அவர் அமைச்சர் அதிஷியிடம் தான் பணி குறித்து தகவல் தெரிவிப்பார் என்றும் கெஜ்ரிவால் கூறினார்.  மேலும் செல்போன் பாஸ்வேடை அரவிந்த் கெஜ்ரிவால் தரமறுப்பதாகவும் எஸ்.வி.ராஜு வாதம் முன்வைத்தார்.

அதோடு கெஜ்ரிவாலிடம் இன்னும் நிறைய விசாரணை நடத்தப்பட வேண்டியுள்ளது . எனவே,  நீதிமன்ற காவலை நீட்டிக்க வேண்டும் என்று அமலாக்கத்துறை சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.  கோரிக்கையை ஏற்ற நீதிமன்றம், ஏப்ரல் 15ம் தேதி வரை கெஜ்ரிவாலை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.

ஏப்ரல் 19ம் தேதி நாடு முழுவதும் 22 மாநிலங்களில் முதற்கட்ட நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் நிலையில்,  தற்போது கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவலை நீட்டித்து வழங்கப்பட்டுள்ள உத்தரவு பல்வேறு விவாதங்களை கிளப்பியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.