சமூக நீதிக்கு எதிரானது என 10 சதவிகித இடஒதுக்கீட்டு தீர்ப்பை முத்தரசன் விமர்சித்துள்ளார்.
பொருளாதாரத்தில் பின் தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத் திருத்தத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இவ்வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம், 10 சதவிகித இடஒதுக்கீடு செல்லும் என உத்தரவிட்டது. 5 நீதிபதிகளில் 3 நீதிபதிகள் 10 சதவிகித இடஒதுக்கீடு செல்லும் என தீர்ப்பளிக்க, 2 நீதிபதிகள் மாற்றுக் கருத்தை முன்வைத்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதுதொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன் வெளியிட்ட அறிக்கையில், 10 சதவித இடஒதுக்கீடு தொடர்பான தீர்ப்பு சரியல்ல. இது அதிர்ச்சி அளிக்கிறது. ஒன்றிய அரசின் சட்டத் திருத்தம் பொருளாதார அடிப்படையை மட்டும் அளவுகோளாக கொண்டதும், அது உயர் சாதி பிரிவினருக்கு மட்டுமானதும் என்பதை உச்ச நீதிமன்றம் கருத்தில் கொள்ளவில்லை” என்று குற்றம்சாட்டியுள்ளார்.
இட ஒதுக்கீடு கொள்கை மறு ஆய்வு செய்யப்பட வேண்டும். இட ஒதுக்கீடுகள் தொடர்ந்து நீட்டிக்கப்படுவது சரியல்ல என்ற கருத்துக்கள் வெளிப்பட்டுள்ளன. இவை பழங்குடி, பட்டியல் இன இதர பிற்படுத்தப்பட்டோருக்கான உரிமைகளை பறிக்க வழி வகுக்கும் என்று சுட்டிக்காட்டியுள்ள அவர், “இட ஒதுக்கீடு முழுமையாக நடைமுறைப்படுத்தப்படாத காலகட்டத்தில், இட ஒதுக்கீடு நீண்ட காலமாக நடைமுறையில் உள்ளது போல் ஒரு தோற்றத்தை உருவாக்கி இருப்பது மிகவும் வருந்தத்தக்கது” என்றும் கூறியுள்ளார். எனவே சமூக நீதிக் கோட்பாட்டிற்கு எதிரான இந்த தீர்ப்பு ஏற்கத்தக்கது அல்ல என்றும் அவர் விமர்சித்துள்ளார்.