பள்ளியிலேயே மாணவர்கள் போதை பழக்கத்துக்கு அடிமையாகும் சூழல் உருவாக்கப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகளான கிருபாகரன் மற்றும் புகழேந்தி ஆகியோர் வேதனை தெரிவித்துள்ளனர்.
கொடைக்கானலை சேர்ந்த மனோஜ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், மருத்துவம் மற்றும் பொறியியல் தவிர, பிற துறைகள் சார்ந்த வழிகாட்டுதலுக்கு, தமிழகத்தில் போதிய பயிற்சி மையங்கள் இல்லை என்றும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிற்சி மையங்கள் அமைக்க உத்தரவிட வேண்டும் எனவும் கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு, தமிழகத்தில் உள்ள மாணவர்களுக்கு பல துறைகள் குறித்த விழிப்புணர்வு இல்லை என்றும், தமிழக அரசின் வேலை வாய்ப்புகளுக்கே, தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் விண்ணப்பிப்பது இல்லை என்றும் தெரிவித்தனர்.
பள்ளியிலேயே மாணவர்கள் கஞ்சாவிற்கும் மதுவிற்கும் அடிமையாகும் சூழலை அரசு உருவாக்கிவிட்டதாக வேதனை தெரிவித்த நீதிபதிகள், அரசு மட்டுமல்லாது அரசியல் கட்சியை சேர்ந்தவர்களும் போதிய விழிப்புணர்வு பயிற்சி மையங்களை அமைக்கலாம் என்றும் கூறினர். இதுகுறித்து தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை 2 வாரங்களுக்கு ஒத்தி வைத்தனர்.







