விவசாயிகளின் போராட்டத்தை உடனடியாக மத்திய அரசு பேசி தீர்க்காவிட்டால் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து போராடும் என இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் விஜய் வசந்த் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகம் அருகே இன்று காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர் எச். வசந்தகுமாரின் மகன், விஜய் வசந்த் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது “விவசாயிகளுக்கு எதிராக நடந்து வரும் போராட்டத்தை மத்திய அரசு உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும் எனவும் அதுவரை காங்கிரஸ் கட்சியை விவசாயிகளுக்காக போராடும் என்றும் தெரிவித்தார்.
மேலும் கார்ப்பரேட் முதலாளிகள் லாபம் பெருவதற்காகவே இந்த சட்டம் கொண்டு வரப்பட்டதாகவும் எனவே இந்த சட்டத்தை உடனடியாக மத்திய அரசு வாபஸ் பெற வேண்டும் என்றும் அவர் கூறினார். இதனையடுத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்ட காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டனர் இந்த போராட்டத்தையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.







