கிரிக்கெட் விளையாடியபோது பந்து நெஞ்சில் பட்டதில் இளைஞர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
திருவள்ளூரை அடுத்த புன்னப்பாக்கம் கிராமம் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் லோகநாதன். இவர் ஆந்திர மாநிலம் புத்தூர் பகுதியிலுள்ள தனியார் சட்டக்கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். லோகநாதன் சிலமாதங்களுக்கு முன் தான் ராசாத்தி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் லோகநாதன் தனது நண்பர்களுடன் விளையாட்டு மைதானத்திற்கு கிரிக்கெட் விளையாடச் சென்றுள்ளார். லோகநாதன் மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த போது, வாலிபர் ஒருவர் அடித்து மேலே வந்த பந்து லோகநாதனின் நெஞ்சில் பலமாகபட்டுள்ளது. அதில் அவர் அங்கேயே மயங்கி விழுந்துள்ளார். இதை கண்ட சக நண்பர்கள் உடனடியாக அவரை மீட்டு, மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அவர் ஏற்கெனவே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து திருவள்ளூர் டவுன் போலீசார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கிரிக்கெட் பந்து நெஞ்சில் பட்டதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தது உறவினர்களிடேயே அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுததியுள்ளது.