கொள்ளையடிக்க சென்ற திருடன், மதுபோதையால் அந்த வீட்டிலேயே உறங்கி மாட்டிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ஆதம்பாக்கத்தைச் சேர்ந்தவர் சேகர், இவரது மனைவி ஆனந்தி இருவரும் சமையல் வேலை பார்த்து வருகின்றனர். சமபவத்தன்று நங்கநல்லூரில் ஒரு வீட்டில்
சமையல் வேலைக்கு சென்று நேற்று மாலை வீடு திரும்பியுள்ளனர். அப்போது, வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இருவரும் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்ட நிலையில் மர்ம நபர் அதன் அருகே மதுபோதையில் உறங்கி கொண்டிருந்துள்ளார்.
இதனை கண்டு ஆனந்தி கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தினர் வந்து மதுபோதையில் தூங்கி கொண்டிருந்த கொள்ளையனை பிடித்து ஆதம்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மதுபோதையில் இருந்த திருடனை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் ஆலந்தூர் வ.உ.சி தெருவை சேர்ந்த நாகராஜ் என்பதும் அவர் மீது பல்வேறு கொள்ளை வழக்குகள் உள்ளதும் போலீசாருக்கு தெரியவந்தது. சென்னையில் கொள்ளை அடிக்க வந்த திருடன், மதுபோதையால் அந்த வீட்டிலேயே உறங்கி மாட்டிக் கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.







