தமிழ்நாட்டில் ஏழை எளிய மக்களுக்கு தரமான மருத்துவ சிகிச்சை வழங்குவது உறுதி செய்யப்பட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை ராயபுரத்தில் அம்மா மினி கிளினிக்கை தொடங்கி வைத்த பின்பு நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் பழனிசாமி, ஏழை மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் மினி கிளினிக் ஏற்படுத்தப்பட்டுள்ளது வரலாற்று சாதனை எனக்கூறினார். பொதுமக்களிடையே வந்த கோரிக்கையின் அடிப்படையில் அம்மா ஆரோக்கியம், கர்ப்பிணி பெண்களுக்கு நிதியுதவி, மகப்பேறு நிதியுதவி உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார். மேலும், தனியார் மருத்துவமனைகளில் உள்ள வசதிகளை விட அரசு மருத்துவமனைகளில் கூடுதல் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன எனவும் குறிப்பிட்டார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தொடர்ந்து, தமிழகத்தில் 5,000க்கும் அதிகமானோர், மருத்துவம் படிக்கும் சூழல் உருவாக்கப்பட்டுள்ளது எனக்கூறிய முதல்வர் பழனிசாமி, ஏழை குடும்பத்தில் பிறந்த மாணவர்களும் மருத்துவம் படிக்கும் சூழலை தமிழக அரசு உருவாக்கி தந்துள்ளது என தெரிவித்தார். மேலும், கொரோனா பரிசோதனை செய்வதில் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது என பிரதமர் மோடி பாராட்டியதை அவர் குறிப்பிட்டார். மேலும் நிவர், புரெவி புயல்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசால் விலையில்லா உணவு வழங்கப்பட்டு வருவதாகவும் முதல்வர் பழனிசாமி தெரிவித்தார். முதற்கட்டமாக சென்னை ராயபுரம், வியாசர்பாடி, மயிலாப்பூர் ஆகிய பகுதிகளில் அம்மா மினி கிளினிக்கை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.
முன்னதாக பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், கொடிய நோயான கொரனாவிலிருந்து தமிழகம் வேகமாக மீண்டு வந்திருப்பது பாராட்டுக்குரியது என தெரிவித்தார். கொரோனா பரவலை தடுக்க, தமிழக அரசு கையாண்ட முறையை பிரதமர் மோடி பாராட்டினார் என அவர் குறிப்பிட்டார். மேலும், அரசைத்தேடி மக்கள் என்ற நிலை மாறி, மக்களை தேடி அரசு என்ற நிலை உருவாகியுள்ளது எனக்கூறினார். தொடர்ந்து பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ஏழை எளிய மக்களுக்கும் உதவிடும் வகையில் அம்மா மினி கிளினிக் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது என்றும், இது தமிழக மருத்துவ சேவை வரலாற்றில் ஒரு மைல்கல் எனவும் குறிப்பிட்டார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், ஜெயக்குமார் மற்றும் அரசு உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.