திருவள்ளூர் மாவட்டம் ஆரணியில் இருசக்கர வாகனத்தில் கஞ்சா கடத்தி வந்த 6 இளைஞர்களை போலீசார் விரட்டி பிடித்தனர்,அவர்களிடம் இருந்து சுமார் 1கிலோ250 கிராம் அளவிலான கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம், ஆரணி காவல் நிலையம் அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக சந்தேகத்திற்குரிய வகையில் மூன்று இருசக்கர வாகனங்களில் 6 இளைஞர்கள் வந்தனர். அவர்கள் வந்த வாகனங்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். ஆனால் அவர்கள் நிறுத்திவது போல் பாவனை செய்துவிட்டு ஆரணி அரசினர் பள்ளி வளாகம் வழியாக மின்னல் வேகத்தில் தப்பிச்செல்ல முயன்றனர்.
இதையடுத்து தொடர்ந்து துரத்திய போலீசார், சினிமா பாணியில் அவர்களை விரட்டி பிடித்தனர். அவர்களின் நடத்தையில் சந்தேகம் அடைந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர்களிடம் போதைபொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களிடம் இருந்து 1 கிலோ 250 கிராம் அளவிலான கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
பின்னர் காவல்நிலையம் அழைத்து சென்று விசாரண மேற்கொண்டதில் ஆந்திராவில் இருந்து போதை பொருள் கடத்தி வந்ததை ஒப்புக்கொண்டனர். இதனை தொடர்ந்து சென்னை கொருக்குப்பேட்டையை சேர்ந்த சபியுல்லா(23), பிரவீன்(22), முனுசாமி(23), கார்த்திக்(22), வெங்கடேசன்(23), விக்னேஷ்(22) ஆகிய ஆறு பேரையும் கைது செய்த போலீஸ் அவர்களிடம் இருந்து ஆறு செல்போன்கள் மற்றும் அவர்கள் கடத்தலுக்கு பயன்படுத்திய மூன்று இரு சக்கர வாகங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.







