வாச்சாத்தியில் மலைக்கிராம மக்கள் மீதான வன்கொடுமை தொடர்பான வழக்கின் தீர்ப்பினை தேதி குறிப்பிடாமல் சென்னை உயர் நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது.
தர்மபுரி வாசாத்தி மலைக்கிராமத்தில் சந்தனமரங்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கூறி 1992 ஜூன் 20இல் வனத் துறையினர், போலீஸார், வருவாய்த் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது, இந்த கிராமத்தில் உள்ள இளம் பெண்கள் 18 பேரை அதிகாரிகள் பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
4 ஐ.எப்.எஸ். அதிகாரிகள் உள்பட வனத் துறையினர், காவல் துறை, வருவாய்த் துறையினர் என 215 பேர் மீது பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட பல்வேறு சட்டப் பிரிவுகளின் கீழ் சிபிஐ வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணையின்போது, குற்றம் சாட்டப்பட்ட 50க்கும் மேற்பட்டவர்கள் இறந்துவிட்டனர். மீதமுள்ளவர்களுக்கு ஓராண்டு முதல் 10 ஆண்டுகள் வரை தண்டனை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தண்டனை பெற்றவர்கள் மேல் முறையீடு செய்தனர். இந்த வழக்குகளை நீதிபதி வேல்முருகன் விசாரித்து வந்தார்.
இதையும் படிக்கவும்: மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க இன்று கடைசி நாள்!
மனுதாரர்கள் தரப்பில், மூத்த வழக்கறிஞர்கள் கோபிநாத், ஜான் சத்தியன், ரமேஷ் உள்பட பலர் ஆஜராகி வாதிட்டனர். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வேல்முருகன், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்லிவைத்தார். மேலும், மார்ச் 4ஆம் தேதி சம்பவம் நடந்த மலைக் கிராமத்திற்குச் சென்று ஆய்வு செய்யவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
-ம.பவித்ரா








