காதலிக்க மறுத்தப் பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்துவிட்டு, உயிரிழப்புக்கு முயன்ற இளைஞர் மருத்துவமனையில் உயிரிழந்தார்.
கேரள மாநிலம் கோழிக்கோடு அருகில் உள்ள திகோடியை சேர்ந்தவர் சிந்தூரி என்ற கிருஷ்ணப்பிரியா (22). முதுகலை கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்துள்ள இவர், திகோடி பஞ்சாயத்து அலுவலகத்தில் தற்காலிக பணியாளராக கடந்த 8 நாட்களுக்கு முன் சேர்ந்தார். அதே பகுதியைச் சேர்ந்தவர் நந்தகுமார் (26). கூலித் தொழிலாளியான இவர், கடந்த சில மாதங்களாக ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஒரு கட்டத்தில் தனது காதலை கிருஷ்ணப்பிரியாவிடம் தெரிவிக்க அவர் ஏற்க மறுத்து விட்டார். இருந்தும் தொடர்ந்து கிருஷ்ணப்பிரியாவை அவர் தொந்தரவு செய்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் திகோடி பஞ்சாயத்து அலுவலகத்துக்கு, கிருஷ்ணப் பிரியா வழக்கம்போல நேற்று காலை வந்தார். அவரைப் பின் தொடர்ந்து வந்த நந்தகுமார், மீண்டும் தனது காதலை ஏற்கும்படி வற்புறுத்தியுள்ளார். அவர் மறுத்துள்ளார். வாக்குவாதம் ஏற்பட்டதை அடுத்து ஆத்திரமடைந்த நந்தகுமார், மறைத்து வைத்திருந்த பெட்ரோலை, அவர் மீது திடீரென ஊற்றி தீவைத்தார். அடுத்த நொடியே அலறி துடித்தார் அவர்.
இதற்கிடையே பஞ்சாயத்து அலுவலகத்தின் வெளியே வந்த நந்தகுமார், தன் மீதும் பெட்ரோல் ஊற்றி தீவைத்துக் கொண்டார். இவர்கள் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் தீயை அணைத்து மருத்துவமனையின் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கிருஷ்ணப்பிரியா உயிரிழந்தார். நந்தகுமாருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப் பட்டு வந்தது. இந்நிலையில் இன்று நந்தகுமாரும் உயிரிழந்தார். இந்த சம்பவம் கேரளாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.