வந்தவாசி அருகே பள்ளி மாணவியை கடத்திய இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கர்நாடக மாநிலம், சிமோகாவைச் சேர்ந்த ராஜா என்பவரது மகன் லிங்கோத் (வயது 23), கட்டிட தொழிலாளியாக பணியாற்றிவருகிறார். இவர் திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியை அடுத்த தாடிநொளம்பை கிராமத்தில் உள்ள சித்தி வீட்டில் தங்கி கட்டிட பணியில் ஈடுபட்டு வந்தார். அப்போது அதே ஊரைச் சேர்ந்த 12ம் வகுப்பு முடித்து வீட்டில் இருந்த, ரமேஷ் என்பவரின் 17 வயதான மகளிடம் பழகியுள்ளார். ஒரு வாரத்துக்கு முன்பாக பள்ளி மாணவியை ஆசை வார்த்தைக்கூறி சிமோகா அழைத்துச் சென்றுள்ளார்.
பின்னர் அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்களின் வீடுகளில் மாணவியை பெற்றோர் தேடி பார்த்தனர். ஆனால் எங்கு தேடியும் அவர் கிடைக்காததால், வடவணக்கம்பாடி காவல் நிலையத்தில் மாணவியின் தந்தை ரமேஷ் புகார் அளித்தார். இதைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்த போலீசார் மாணவியை கண்டுபிடித்து லிங்கோத்தை போக்சோ சட்டத்தில் கைது செய்து, நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.







