மதுரை இளைஞர் மரணம் – விசாரணையை தொடங்கிய சிபிசிஐடி..!

மதுரையில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட இளைஞர் உயிரிழந்த வழக்கில் சிபிசிஐடியினர் இன்று விசாரணையை தொடங்கினர்.

மதுரை அண்ணாநகர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட யாகப்பா நகர் பகுதியை சேர்ந்தவர் தினேஷ் குமார் (30). இவர் கடந்த 9 ஆம் தேதி தனது வீட்டிலிருந்து, அண்ணாநகர் காவல்துறையினர் மற்றும் தனிப்படையினரால் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.

பின்னர் மதியம்  தினேஷ்குமார் வண்டியூர் வைகையாற்று கால்வாயில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். காவல்துறையினர்  தினேஷ்குமார் விசாரணையின்போது தப்பியோடியதாக அவரது பெற்றோரிடம் கூறினர்.

இந்த உயிரிழப்பு விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் கடந்த  2 நாட்களாக தினேஷ்குமாரின் உறவினர்கள் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதிகள் இவ்வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டனர்

அதன்படி சிபிசிஐடி அதிகாரிகள் தினேஷ்குமார் உயிரிழந்த வழக்கு தொடர்பான விசாரணையை இன்று தொடங்கினர்.

இளைஞர் தினேஷ்குமார் உயிரிழப்பு விவகாரத்தில் அண்ணாநகர் ஆய்வாளராக பணிபுரிந்த பிளவர்சீலா ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.