சென்னை எழும்பூர் காவல் நிலையம் அருகே இளைஞர் ஒருவர் பட்டப்பகலில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை, வியாசர்பாடி கன்னிகாபுரத்தை சேர்ந்தவர்க விக்கி என்கிற விக்னேஷ். திருமணமாகி அயனாவரம், பக்தவச்லம் தெருவில் மனைவி, குழந்தையுடன் தனியாக வசித்து வந்தார். இவர் சென்னை எழும்பூர் காவல் நிலையம் அருகே உள்ள தனியார் இன்டர்நெட் இணைப்பு தரும் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி தேவப்பிரியா சென்னை எழும்பூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறார்.
இன்று காலை தேவபிரியாவை அவரது அலுவலகத்தில் விட்டு விட்டு எழும்பூர் நெடுஞ்சாலை அருகே உள்ள அவரது நிறுவனத்திற்கு வந்துள்ளார். அப்போது நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுடன் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
சந்தோஷ் என்ற ஊழியர் விக்னேஷை சரமாரியாக வெட்டியுள்ளார். அவரை தடுக்க சென்ற அருகில் இருந்த மற்றொரு நபருக்கும் வெட்டுக்காயம் ஏற்பட்டது. அதிகப்படியான வெட்டுக் காயங்களுடன் தப்ப முயன்ற விக்னேஷ் அந்த வளாகத்திலேயே தொடர்ந்து தாக்கப்பட்டுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே விக்னேஷ் உயிரிழந்துள்ளார்.
படுகொலை செய்த கொலை குற்றவாளிகள் அலுவலகத்தின் மாடியில் ஏறி கட்டடம் விட்டு கட்டடம் ஏறி குதித்து தப்பி சென்றனர். இது தொடர்பாக திருவல்லிக்கேணி துணை ஆணையர் சேகர் தேஷ்முக் தலைமையில் காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.
மேலும், மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு கொலை நடந்த இடத்தில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. பட்டப்பகலில் காவல் நிலையம் அருகே நடைபெற்ற இந்தப் படுகொலை சம்பவம் அப்பகுதி முழுவதும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.







