காஞ்சிபுரத்தில் பயங்கரம்; ஊராட்சி மன்ற தலைவர் வெட்டி படுகொலை

ஸ்ரீபெரும்புதூர் அருகே ஊராட்சி மன்ற தலைவர் பெட்ரோல் குண்டு வீசியும், ஓட ஓட விரட்டியும் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட மாடம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன்(48). இவர் ஊராட்சி மன்ற…

ஸ்ரீபெரும்புதூர் அருகே ஊராட்சி மன்ற தலைவர் பெட்ரோல் குண்டு வீசியும், ஓட ஓட விரட்டியும் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட மாடம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன்(48). இவர் ஊராட்சி மன்ற தலைவராக பதிவி வகித்து வந்தார். இந்நிலையில் நேற்று இரவு அவரது தொலைபேசிக்கு அழைப்பு வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து ராகவேந்திரா நகர் பாலம் அருகே வெங்கடேசன் சென்ற போது மறைந்திருந்த
மர்ம நபர்கள் வெங்கடேசன் மீது பெட்ரோல் குண்டு வீசி தாக்கி உள்ளனர்.

அப்போது தப்பி ஓடிய வெங்கடேசனை ஓட ஓட விரட்டிச் சென்று, கத்தி, வீச்சருவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் தலை மற்றும் கழுத்தில் சரமாரியாக வெட்டி விட்டு தப்பினர். இதில் பலத்த காயமடைந்த வெங்கடேசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மணிமங்கலம் போலீசார், உயிரிழந்த வெங்கடேசனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் வெங்கடேசன் மீது கொலை முயற்சி, கொலை மிரட்டல் போன்ற பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்துள்ளது.

தொழில் போட்டி காரணமாக வெங்கடேசன் கொலை செய்யப்பட்டாரா, அல்லது முன்விரோதம் போன்ற வேறு ஏதேனும் காரணமா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால், மாடம்பாக்கத்தில் பதற்றமான சூழல் நிலவி வருவதையடுத்து, 40க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.