உடல் எடை குறைப்பு அறுவை சிகிச்சையில் இளைஞர் உயிரிழந்த விவகாரம் | பம்மல் ஜெயின் மருத்துவமனையை மூட சுகாதாரத்துறை உத்தரவு!

எடை குறைப்பு சிகிச்சையின்போது புதுச்சேரி இளைஞர் உயிரிழந்த விவகாரத்தில், பம்மல் ஜெயின் மருத்துவமனையை மூட சுகாதாரத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. புதுச்சேரி இளைஞருக்கு கொழுப்பு நீக்க அறுவை சிகிச்சையினை கடந்த 2 வாரங்களுக்கு முன்னதாக சென்னையை…

எடை குறைப்பு சிகிச்சையின்போது புதுச்சேரி இளைஞர் உயிரிழந்த விவகாரத்தில், பம்மல் ஜெயின் மருத்துவமனையை மூட சுகாதாரத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

புதுச்சேரி இளைஞருக்கு கொழுப்பு நீக்க அறுவை சிகிச்சையினை கடந்த 2 வாரங்களுக்கு முன்னதாக சென்னையை அடுத்த பம்மலில் உள்ள பி.பி.ஜெயின் மருத்துவமனை மேற்கொண்டிருந்தது.  அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களிலேயே இளைஞர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.  இதையடுத்து மருத்துவத்துறை அமைச்சர் உரிய விசாரணை குழுவை அமைத்திருந்த நிலையில்,  விசாரணை குழு விசாரணை அறிக்கையினை 2 தினங்களுக்கு முன்னதாக மருத்துவத்துறை அமைச்சரிடம் சமர்ப்பித்தது.

இந்நிலையில், பி.பி.ஜெயின் மருத்துவமனை மீது மருத்துவத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.  அதாவது, மருத்துவ அதிகாரிகள் ஆய்வு செய்ததில் பி.பி.ஜெயின் மருத்துவமனையில் போதிய வசதிகள் இல்லை என்று உறுதியானதை அடுத்து, பி.பி.ஜெயின் மருத்துவமனையை தற்காலிகமாக மூட சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

பி.பி.ஜெயின் மருத்துவமனையில் உயிர் காக்கும் சிகிச்சைக்கான கருவிகள் போதுமான அளவு இல்லை.  மருத்துவமனையில் போதுமான அளவு டெக்னீசியன்கள் இல்லை.  அறுவை சிகிச்சைக்கு முன்பு பெற்றோர்களிடம் உரிய தகவலை தெரிவித்து மருத்துவமனை நிர்வாகம் கையெழுத்து பெறவில்லை.

அறுவை சிகிச்சைக்கான போதிய பயிற்சி பெற்ற மருத்துவர்கள் மருத்துவமனையில் இல்லை.  அவசரகால மருத்துவர்கள்,  கருவிகள் இல்லை என்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  தனியார் மருத்துவமனை மீது பல தவறுகள் இருப்பதால் தற்காலிகமாக மூட சுகாதாரத்துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.  உரிய மருத்துவர்கள், சிகிச்சைக்கான கருவிகளை ஏற்பாடு செய்யவும் மருத்துவமனைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மருத்துவமனையில் இருக்கக்கூடிய குறைபாடுகளை நிவர்த்தி செய்து,  மீண்டும் அந்த அறிக்கையினை டி.எம்.எஸ்.சிற்கு வழங்கினால்,  மீண்டும் இணை இயக்குனர்கள் கொண்ட குழு, மருத்துவமனையில் உரிய ஆய்வுகள் மேற்கொண்ட பிறகு மருத்துவமனை திறக்கலாமா? என்பது குறித்து முடிவு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.