16 வயது சிறுமியை காதலிக்க மிரட்டிய இளைஞர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று மாலை பெருமாள் கோயில் தெருவில் கிருஷ்ண ஜெயந்தி விழாவை பார்ப்பதற்காக அவரது உறவினருடன் வந்துள்ளார். பின்னர் சுவாமி தரிசனம் செய்து விட்டு உறவினருடன் இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு சென்றுள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அப்போது காந்தி சிலை அருகே சிறுமி சென்ற வாகனத்தை வழிமறித்த, திண்டிவனம் தியாகி சண்முகப்பிள்ளை தெருவை சேர்ந்த அஸ்கர் என்பவர் சிறுமியை காதலிக்க வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. மேலும் காதலிக்கவில்லை என்றால் கொலை செய்து விடுவேன் என கொலை மிரட்டல் விடுத்ததாகவும் தெரிகிறது. இதனால் பெண்ணின் பெற்றோர் திண்டிவனம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் அஸ்கர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி திண்டிவனம் கிளை சிறையில் அடைத்தனர்.