share chat, facebook மூலம் பழகி, காதல் என்ற போர்வையில் 17 வயது சிறுமியின் வாழ்க்கையில் விளையாடிய இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தமிழகத்தை அதிரவைத்த பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை நிகழ்வு, எப்போது நினைத்தாலும் நெஞ்சை பதைபதைக்க வைக்கும். அதே கோவை மாவட்டத்தில் தற்போது 17 வயது சிறுமிக்கு இரு கயவர்களால் பாலியல் வன்கொடுமை நேர்ந்துள்ளது. சமூக வலைதளத்தில் ஏற்பட்ட பழக்கம் இப்படியொரு விபரீதத்தில் முடிந்திருக்கிறது.
கோவை செல்வபுரம் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி, 11ம் வகுப்பு படித்து வருகிறார். தற்போது பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், ஆன்லைன் வகுப்பில் படித்து வரும் சிறுமிக்கு, திருச்சி மாவட்டம் லால்குடியை சேர்ந்த ஏழுமலை என்பவருடன் share chat, facebook மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வந்த ஏழுமலை, சிறுமியை காதல் வலையில் விழவைத்துள்ளார்.
இந்நிலையில், திருச்சியில் சந்திக்கலாம் எனக்கூறி, சிறுமியை அழைத்துள்ளார் ஏழுமலை. காதலனை நம்பி திருச்சிக்கு செல்ல முடிவு செய்த சிறுமி, நட்பாக பழகிய கோவை சரணம்பட்டியை சேர்ந்த கால்டாக்ஸி ஓட்டுநரான சண்முகவேல் என்பவரின் காரில் திருச்சிக்கு புறப்பட்டுள்ளார். அப்போதுதான், சிறுமியிடம் தனது கொடூர குணத்தை காட்டியுள்ளார் சண்முகவேல்.
சிறுமியை திருச்சிக்கு அழைத்து செல்வதாக கூறி, ஊட்டிக்கு அழைத்து சென்று, 3 நாட்கள் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் கார் ஓட்டுநர் சண்முகவேல். பின்னர், சிறுமியை அப்படியே விட்டுவிட்டு சண்முகவேல் சென்றுவிட, காதலன் ஏழுமலையை தேடி திருச்சி சென்றுள்ளார் சிறுமி. அங்கேயும் சிறுமிக்கு கிடைத்தது ஏமாற்றம் மட்டுமே. சிறுமியை, காதல் என்ற போர்வையில் பாலியல் வன்கொடுமை செய்த ஏழுமலை, வேளாங்கண்ணிக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கே சிறுமியை தன்னந்தனியாக விட்டுவிட்டு, சென்னைக்கு ஓடியுள்ளார். ஏழுமலை.

இதற்கிடையே, சிறுமி மாயமானது குறித்து, அவரது பெற்றோர் அளித்த புகாரின்போரில், கோவை போலீசார் செல்போன் சிக்னலை வைத்து சிறுமியை கண்காணித்து வந்தனர். இதில், சிறுமி வேளாங்கண்ணியில் இருப்பது தெரியவந்தது. உடனே வேளாங்கண்ணி விரைந்த போலீசார், சிறுமியை மீட்டு கோவை அழைத்து வந்தனர். அதேநேரம், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக காதலன் ஏழுமலை மற்றும் கால்டாக்ஸி ஓட்டுநர் சண்முகவேல் ஆகிய இருவரையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.







