பொள்ளாச்சி பாலியல் வழக்கு தொடர்பாக அதிமுக பிரமுகர் உட்பட 3 பேரை சிபிஐ போலீசார் கைது செய்தனர்.
பொள்ளாச்சியில் இளம்பெண்களை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து, அதனை வீடியோ எடுத்து மிரட்டிய விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கு தொடர்பாக சிபிஐ விசாரணை நடைபெற்ற நிலையில், திருநாவுக்கரசு, சபரி, சதீஷ்குமார், வசந்தகுமார், மணிகண்டன் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர். இதுகுறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட சிபிஐ போலீசார், அதிமுக பிரமுகர் அருளானந்தம் என்பவர் உள்பட மேலும் 3 பேரை கைது செய்தனர்.

ரகசிய இடத்தில் வைத்து அவர்களிடம் விசாரணை நடத்திய பின்னர், மூவரும் கோவை மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை வருகிற 20ஆம் தேதி நீதிமன்ற காவலில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனிடையே, கைது செய்யப்பட்டவர்களுக்கு உரிய தண்டனை வழங்க வலியுறுத்தி, திமுக மகளிர் அணியினர் மற்றும் ஜனநாயக மாதர் சங்கத்தினர் நீதிமன்ற வாயிலில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.







