தவெக தலைவர் விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு அமல் – மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு!

தவெக தலைவர் விஜய்க்கு இன்று முதல் ஒய் பிரிவு பாதுகாப்பு நடைமுறை அமலுக்கு வந்துள்ளது.

நடிகர் விஜய் கடந்த ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார். தமிழக வெற்றிக் கழகம் கட்சி தொடங்கப்பட்ட இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இதற்கிடையே 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை மையமாக கொண்டு தேர்தல் பணிகளை தவெக தலைவர் விஜய் மேற்கொண்டு வருகிறார்.

இதனிடையே தேர்தலை முன்னிட்டு பல்வேறு பொது இடங்களுக்கு தவெக தலைவர் விஜய் பயணம் செய்ய உள்ளார். இதன் காரணமாக விஜய்க்கு சமூக ஊடகங்களில் அச்சுறுத்தல் எழுந்த நிலையில், அவரின் பாதுகாப்பு கருதி “ஒய்” பிரிவு பாதுகாப்பு வழங்க உள்துறை அமைச்சகம் கடந்த மாதம் உத்தரவிட்டிருந்தது.

அதன்படி, ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில், மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் பனையூரில் உள்ள தவெக கட்சி அலுவலகத்தில் கட்சியின் தலைவர் விஜய் மற்றும் நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்தனர்.

இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு நடைமுறை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி, தவெக தலைவர் விஜய்க்கு 8 முதல் 11 பேர் கொண்ட துப்பாக்கி ஏந்திய மத்திய ரிசர்வ் படை கமாண்டோக்கள் சுழற்சி முறையில் பாதுகாப்பு வழங்குவர்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.