ராகுல் காந்தியில் நடை பயணத்தால் நாட்டிற்கு எந்த மாற்றமும் ஏற்படாது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
நாம் தமிழர் கட்சியின் பெரம்பலூர் மாவட்ட முன்னாள் செயலாளரும் வழக்கறிஞருமான அருளின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் கூட்டம் குன்னத்தில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், ராகுல் காந்தி தினமும் நடக்கின்றார். அதனால் என்ன நடந்து விடப் போகிறது. ஒன்றும் நடக்காது. காலையில் 1.15 மணி நேரம், மாலையில் 1.15 மணி நேரம். அவர் நடைபயிற்சி எடுக்கிறார். இதனால் எந்த மாற்றம் வந்துவிடப் போகிறது?
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
50 ஆண்டுகள் இந்த நாட்டை ஆளுகின்ற போது ஏற்படுத்தாத மாற்றத்தை இந்த நடை பயணம் செய்யும் மூன்று மாத காலத்தில் ஏற்படுத்தி விடப்போகிறது? நடந்து மாற்றத்தை ஏற்படுத்தி விடுவார் என்றால் எப்படி? மாற்றம் வரும் என்றால் எல்லோரும் நடக்க வேண்டியது தானே! ராகுல் காந்தி நடந்து எந்த கட்சியை ஒருங்கிணைக்க முடியும்? முதலில் தேசிய ஒற்றுமையை ஒருங்கிணைக்க வேண்டும். நடந்து சென்று கட்சிகளை ஒருங்கிணைக்க முடியாது.
தற்போது நடைமுறைப் படுத்தப்பட்டுள்ள மின்கட்டண உயர்வை 99 சதவீத மக்கள் எதிர்த்து தான் கருத்துக்களை தெரிவித்து உள்ளனர். முதல்வர், மக்கள் கருத்திற்கானவரா? நலனிற்கானவரா என்ற கேள்வி உள்ளது.
நாட்டை ஆளுகின்ற முதல்வரின் கருத்து தான் என்ன? அதிமுக ஆட்சியில் மின் கட்டண உயர்விற்கு அப்போது கொரோனாவை விட மிக கொடுமையானது என்றார். எதிர்க்கட்சியாக உள்ளபோது ஒரு கருத்தை கூறுகிறார். ஆளுங்கட்சியாக இருக்கும்போது வேறொரு கருத்தை கூறுகிறார். நீங்கள் என்னதான் சொல்ல வருகின்றீர்கள். எதை எதிர்த்தீர்களோ அதையே நடைமுறைப்படுத்துகிறீர்கள் என விமர்சனம் தெரிவித்தார்.
கோவில்களில் தமிழிலும் தொடர்ந்து அர்ச்சனை செய்ய வேண்டும் என்பதை நாம் தமிழர் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. தமிழில் வழிபாடு செய்வது தான் நடைமுறை. வழிபாடு என் தாய் மொழியில் தான் இருக்க வேண்டும் என பேட்டியில் கூறினார்.