உலகம் மிகவும் ஆபத்தான காலகட்டத்தில் உள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
உலக நாடுகளை தற்போது டெல்டா வகை கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வருகிறது. டெல்டா வகை கொரோனா வைரஸ், 100 நாடுகளில் பரவியிருப்பதால், தொற்றுநோயின் மிகவும் ஆபத்தான காலகட்டத்தில் உலகம் உள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. இந்த ஆபத்திற்கு எந்த ஒரு நாடும் விதிவிலக்கு அல்ல என்றும், டெல்டா வகை கொரோனா தொடர்ந்து உருமாற்றம் அடைந்து வருவதால், அதுகுறித்த விரிவான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம் என்றும் கூறியுள்ளது.
அதேநேரம், தடுப்பூசிகள், மருத்துவ உபகரணங்கள் ஆகியவற்றை உலக நாடுகளுக்கு இடையே பகிர்ந்து கொள்வதன் மூலம் நாம் இந்த பாதிப்புகளை கட்டுப்படுத்த முடியும் என்று தெரிவித்துள்ள உலக சுகாதார அமைப்பு, இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குள் அனைத்து நாடுகளிலும் குறைந்தபட்சம் 10 சதவீத மக்களாவது கொரோனா தடுப்பூசி செலுத்தியிருப்பதை உலக நாடுகளின் தலைவர்கள் உறுதி செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.







