கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த போது விஷவாயு தாக்கி ஒருவர் உயிரிழப்பு. ஒருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சென்னை கிழக்கு கடற்கரை சாலை, ஈஞ்சம்பாக்கம் சேஷாத்ரி அவென்யூவில் ராஜன் சையல்(67), என்பவரது வீட்டின் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்வதற்காக முத்துகுமார்(30), அப்பு(30), இருவரும் இறங்கி சுத்தம் செய்த போது விஷவாயு தாக்கி மயங்கியுள்ளனர். இதனால் பதட்டமடைந்த வீட்டின் உரிமையாளர், தீயணைப்பு துறையினருக்கும், ஆம்புலன்சிற்கும் விரைந்து அழைத்துளார். பின்னர் துரைப்பாக்கத்தில் இருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து இருவரையும் மீட்டனர்.
மீட்கபட்ட முத்துகுமார் என்பவரை ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் அங்கு சிகிச்சை பெற்று வருகிறார். அப்பு என்பவரை போலீசார் ஜிப்சி வாகனத்தில் அழைத்து சென்று சோதித்த போது ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பாக நீலாங்கரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.







