ஈரானில் ஹிஜாப்புக்கு எதிராக பெண்கள் தொடர் போராட்டம்

ஈரானில் ஹிஜாப் சரியாக அணியவில்லை எனக் காவல் துறையினர் தாக்கியதில் இளம்பெண் உயிரிழந்ததைத் தொடர்ந்து ஹிஜாப்புக்கு எதிராக  பெண்கள்  தொடர்  போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஈரானில் பெண்களுக்கான உடை கட்டுப்பாடு கடுமையாக பின்பற்றப்பட்டு வருகிறது.…

ஈரானில் ஹிஜாப் சரியாக அணியவில்லை எனக் காவல் துறையினர் தாக்கியதில் இளம்பெண் உயிரிழந்ததைத் தொடர்ந்து ஹிஜாப்புக்கு எதிராக  பெண்கள்  தொடர்  போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஈரானில் பெண்களுக்கான உடை கட்டுப்பாடு கடுமையாக பின்பற்றப்பட்டு வருகிறது. இதனால் ஹிஜாப் கட்டுப்பாடுகளை மீறும் பெண்கள் மீதும்  நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஈரானில் ஹிஜாப் சரியாக அணியவில்லை எனக் கூறி மாசா அமினி என்ற 22 வயது இளம்பெண்ணை, கடந்த வெள்ளிக்கிழமை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அப்பெண்ணை போலீசார் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் கோமா நிலைக்கு சென்ற இளம்பெண் பின்னர் மருத்துவமனையில் உயிரிழந்தார்.

இந்நிலையில் ஹிஜாப் சரியாக அணியாததால் போலீசாரால் தாக்கப்பட்டு பெண் உயிரிழந்த சம்பவம்  அந்நாட்டு பெண்களிடையே அதிர்வலையை  ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஈரானிய அரசுக்கு எதிராகவும், ஹிஜாப் சட்டத்துக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பி பெண்கள் பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பெண்கள் தலைமுடியை வெட்டியும், ஹிஜாபை எரித்தும் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தினர். இதனை தங்களுடைய சமூக வலைதளங்களில் பதிவிட்டும் வருகின்றனர். 

இது குறித்து போராட்டக்காரர்கள் கூறுகையில், “7 வயதுக்கு மேற்பட்ட சிறுமிகள் முதல் பெண்கள் அனைவரும் ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 7 வயதில் இருந்து நாங்கள் எங்களது முடியை மறைக்கவில்லை என்றால் பள்ளிக்கு செல்ல முடியாது, வேலையும் கிடைக்காது. இந்த பாலின பாகுபாடு மிக்க ஆட்சியால் நாங்கள் சோர்வடைகிறோம்” எனத் தெரிவித்தனர்.

-பரசுராமன்.ப 
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.