கிராமப்புற பெண் குழந்தைகள் கல்வி ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை 10ம் வகுப்பு வரை நீட்டிக்க தமிழ்நாடு அரசு பரிசீலித்து வருகிறது.
கிராமப்புற பெண் குழந்தைகள் கல்வி பயில்வதை ஊக்கப்படுத்தும் பொருட்டு அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் பெண் குழந்தைகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி 3 முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்புகளை சார்ந்த மாணவிகளுக்கு ஆண்டுக்கு தலா 500 ரூபாயும், 6 ஆம் வகுப்பு பயிலும் மாணவிகளுக்கு ஆண்டுக்கு தலா 1,000 ரூபாயும் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.
இந்நிலையில் கிராமப்புற பெண் குழந்தைகளுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை 10ம் வகுப்பு வரை நீட்டிக்க தமிழ்நாடு அரசு பரிசீலனை செய்து வருகிறது. இது தொடர்பாக அனைத்து மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர்களுக்கு, மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல இயக்ககம் கடிதம் எழுதியுள்ளது.
இந்த கடிதத்தில், 3ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளின் விவரங்கள் மற்றும் பெற்றோர்களின் வங்கிக் கணக்கு விவரங்களை சேகரிக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், பயனாளிகளுக்கு அவர்களின் பெற்றோர்களின் வங்கிக் கணக்கிலே இந்த ஊக்கத்தொகையை செலுத்துவதற்கு தேவையான நடவடிக்கையும் தமிழ்நாடு அரசு தொடங்கியிருக்கிறது








