முறையான குடிநீர் வசதி கிடைக்காததால் பெண்கள் காலி குடங்களுடன் திடீர் மறியல்!

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே முறையான குடிநீர் வழங்கப்படாததால் அதிமுக எம்எல்ஏ தலைமையில் 200 க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சித்தாலமுத்தூர் பகுதியில்…

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே முறையான குடிநீர் வழங்கப்படாததால்
அதிமுக எம்எல்ஏ தலைமையில் 200 க்கும் மேற்பட்ட பெண்கள் காலி
குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சித்தாலமுத்தூர் பகுதியில் இரண்டு
மாதங்களுக்கு ஒரு முறை குடிநீர் வழங்கப்படுவதாகவும், வழங்கப்படும் குடிநீர்
சுகாதாரமற்ற நிலையில் வருவதாகவும் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் குற்றம் சாட்டினர். இதன் விளைவாக குடிநீரை விலைக்கு வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர்.

இது குறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும், எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதால் அதிமுக எம்எல்ஏ மான்ராஜிடம், பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.

இதனால், அதிமுக எம்எல்ஏ மான்ராஜ் தலைமையில், சுமார் 200க்கும் மேற்பட்ட
பெண்கள் தலையில் காலி குடங்களுடன் ஸ்ரீவில்லிபுத்தூர் – சிவகாசி சாலையில்
மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.பின்னர் தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் மற்றும் அரசு அதிகாரிகள், பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததன் அடிப்படையில், போராட்டம் கைவிடப்பட்டு பொதுமக்கள்
கலைந்து சென்றனர்.

—கு. பாலமுருகன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.