பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மீதான புகாரின் அடிப்படையில், 50 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை அளித்ததாக சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸுக்கு எதிரான வழக்கை சிபிசிஐடி விசாரித்து வரும் நிலையில், விசாரணையை சிபிஐக்கு மாற்ற கோரி ஓய்வுபெற்ற காவல் அதிகாரி ராஜேந்திரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, இந்த விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளதாகவும், விசாரணையை உயர்நீதிமன்றம் கண்காணிக்கும் என உத்தரவிட்டுள்ளதாகவும் தமிழக அரசுத் தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டது.
மேலும், இந்த சம்பவம் தொடர்பாக விசாரிக்க விசாகா குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த வழக்கு தொடர்பாக 50 சாட்சிகளிடம் விசாரிக்கப்பட்டுள்ளதாகவும், வீடியோ ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதனை பதிவு செய்த நீதிபதிகள், வழக்கு விசாரணையை நான்கு வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.







