எதிர்க்கட்சிகளின் இரண்டாவது கூட்டம் பெங்களூரில் நடைபெறுவது தொடர்பான முடிவை காங்கிரஸ் கட்சி இதுவரை இறுதிசெய்யவில்லை என திமுக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
2024-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தொடங்கியுள்ளன. இந்த தேர்தலில் தொடர்ந்து மூன்றாவது முறையாக வெற்றி பெற்று ‘ஹாட்ரிக்’ சாதனை படைக்க பாஜக முனைப்பு காட்டி வருகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தேர்தலுக்கான வியூகங்களை வகுப்பதில் பாஜக தீவிரம் காட்டும் நிலையில், மக்களவை தேர்தலில் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சி தலைவர்களும் தீவிரம் காட்டி வருகின்றனர். இதற்காக கடந்த ஜூன் 23 ஆம் தேதி எதிர்க்கட்சித் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் பீகாரில் நடைபெற்றது. பீகார் தலைநகர் பாட்னாவில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் 17 கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் உட்பட பல மாநில முதலமைச்சர்கள் மற்றும் முன்னாள் முதலமைச்சர்கள் கலந்து கொண்டனர்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி, முதலமைச்சர்களான திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் ஹோமந்த் சோரன், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் மற்றும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆலோசனைக் கூட்டத்திற்கு பின்னர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர்கள், 2வது கட்ட ஆலோசனைக் கூட்டம் விரைவில் நடைபெறும் என்றும், அதனை சிம்லாவில் நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் தெரிவித்திருந்தனர்.
இதனையடுத்து, சிம்லாவில் பெய்து வரும் மழை காரணமாக பெங்களூருவுக்கு கூட்டம் மாற்றப்பட்டு அதற்கான அறிவிப்பை கடந்த ஜூன் 29ஆம் தேதி அன்று தேசிய வாத காங்கிரஸ் கட்சித்தலைவர் சரத்பவார் அறிவித்திருந்தார். அதன்படி வரும் ஜூலை 13 மற்றும் 14ம் தேதிகளில் எதிர்கட்சிகளின் அடுத்த ஆலோசனை கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், கூட்டம் நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
எதிர்க்கட்சிகளின் முதல் கூட்டத்தை ஐக்கிய ஜனதா தளம் & ராஷ்ட்ரிய ஜனதா தளம் இணைந்து ஜூன் 23 ஆம் தேதி பாட்னாவில் நடத்திய நிலையில், இரண்டாவது கூட்டத்தை காங்கிரஸ் கட்சி நடத்துகிறது. தற்போது காவிரி, பெண்ணையாற்று விவகாரங்கள் தொடர்பாக கர்நாடக காங்கிரஸ் அரசின் முடிவு தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பினை ஏற்படுத்தியுள்ள நிலையில், எதிர்க்கட்சிகளின் இரண்டாவது கூட்டம் பெங்களூரில் நடைபெறுவது தொடர்பான முடிவை காங்கிரஸ் கட்சி இதுவரை இறுதி செய்யவில்லை என திமுக நிர்வாகிகள் தரப்பில் கூறப்படுகிறது.
- பி.ஜேம்ஸ் லிசா