நள்ளிரவு சாலையில் உலா வந்த ஒற்றை காட்டு யானை!

மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் உள்ள தட்டப்பள்ளம் பகுதியில் நள்ளிரவு சாலையில் உலா வந்த ஒற்றை காட்டு யானை வாகனங்களை வழி மறுத்தபடி நின்றதால், மலைப்பாதையில் நீண்ட நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. நீலகிரி மாவட்டம் கோத்தகிரி…

மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் உள்ள தட்டப்பள்ளம் பகுதியில் நள்ளிரவு சாலையில் உலா வந்த ஒற்றை காட்டு யானை வாகனங்களை வழி மறுத்தபடி நின்றதால், மலைப்பாதையில் நீண்ட நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலாப்பழம் சீசன் துவங்கி உள்ளது. இதனால் சமவெளிப் பகுதிகளில் இருந்து காட்டு யானை கூட்டங்கள்  மலைப்பகுதிகளில் உள்ள தேயிலை, காஃபி தோட்டங்களில் முகாமிட்டு பகல் மற்றும் இரவு நேரங்களில் குடியிருப்பு, சாலை பகுதிகளில் உலா வருவது தொடர்கதையாக இருந்து வருகிறது.

இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு பகல் நேரங்களில் தட்டப்பள்ளம் பகுதியில் உலா வந்த ஒற்றை காட்டு யானை நள்ளிரவு மீண்டும் வனப்பகுதியில் இருந்து வெளியேறி அதே தட்டப்பள்ளம் மலைப்பாதையில் உலா வந்தது.

அவ்வாறு உலா வந்த காட்டு யானை சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக சாலையிலேயே அங்கும் இங்குமாக உலா வந்து வாகனங்கள் செல்ல வழி விடாமல் நீண்ட நேரம் சாலையிலேயே நின்றது.

இதனால் கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் நெடுஞ்சாலையில் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. ஒற்றை காட்டு யானை நீண்ட நேரம் உலா வந்ததால் வாகன ஓட்டிகள் என்ன செய்வதென்று தெரியாமல் வாகனத்திலேயே சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக காத்து கிடக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

எனவே தொடர்ந்து தட்டப்பள்ளம் பகுதியில் பகல் மற்றும் இரவு நேரங்களில் ஒற்றை
காட்டு யானை உலா வருவது தொடர்கதையாக இருக்கும் நிலையில் வனத்துறையினர்  யானையின் நடமாட்டத்தை கண்காணித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வாகன ரோந்து மேற்கொள்ள வேண்டும் என்பது வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களின் வேண்டுகோளாக உள்ளது.

ரூபி.காமராஜ்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.