தான் அரசியலில் இருந்து வெளிவர கொரோனாதான் காரணம் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள மியூசிக் அகாடமியில் சேப்பியன் சுகாதார அறக்கட்டளையின் 25 வருட விழா நடைபெற்றது. இதில் முன்னாள் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், “வெங்கையா நாயுடு குக் கிராமத்தில் பிறந்தவர். ஒரு சிறந்த அரசியல்வாதியாக வளர்ந்து சிறந்து விளங்கியவர். அவர் என்னுடைய நல்ல நண்பர். மருத்துவர் ரவிச்சந்திரன் என்னுடைய சிறந்த நண்பர். நான் நலமுடன் இங்கே பேசுகிறேன் என்றால் அதற்கு இவர்தான் காரணம்.
இதையும் படியுங்கள் : சாகித்ய அகாடமி விருதை பெற்றுக் கொண்டார் எழுத்தாளர் மு.ராஜேந்திரன்!
நான் அரசியல் பணியில் ஈடுபடும் போது கொரோனா இரண்டாவது அலை துவங்கி விட்டது. நான் அந்த சமயத்தில் வெளியே சென்றால் உடல்நிலை பாதிக்கப்படும் என்று மருத்துவர் கூறினார். அதனால்தான் அரசியலில் இருந்து வெளியே வந்தேன். ஆனால் அதற்கு பல்வேறு காரணங்கள் கூறினார்கள். என்னுடைய மருத்துவர், ’யார் என்ன சொன்னாலும் பரவாயில்லை, அவர்களிடம் நான் கூறுகிறேன், என்னிடம் கூட்டிட்டு வா’ என்று கூறி எனக்கு துணையாக நின்றார்.
உணவில் உப்பு அதிகமாகிவிட்டால் உடலில் உள்ள அனைத்து பாகங்களும் பாதிக்கப்படும். உப்பை தேவையான அளவில் பயன்படுத்துவதால், உடல் ஆரோக்கியமாக இருக்கும். அதேபோல் எண்ணங்கள் நன்றாக இருந்தால் மட்டும் தான், மனசு நன்றாக இருக்கும். மனசு நன்றாக இருந்தால்தான், நாம் நன்றாக இருக்கு முடியும். உடலும் உள்ளமும் மட்டும் எப்போதுமே ஆரோக்கியமாக இருக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.







