ஈரான் – அமெரிக்கா இடையிலான போர் நிறுத்தத்தின் வரைவு ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் மத்தியஸ்தரான பாகிஸ்தான் முன்னிலையில் ஸ்விட்சர்லாந்தில் வரும் வெள்ளிக்கிழமை இருதரப்பினரும் ஒப்பந்தத்தில் முறைப்படி கையொப்பமிடுகின்றனர். அமெரிக்கா-ஈரான் இடையிலான அமைதி ஒப்பந்தம் சுவிட்சர்லாந்தில் ஜூன் 19ம் தேதி கையெழுத்தாக உள்ளது. இந்த நிலையில் மேற்கு ஆசிய போர்நிறுத்த ஒப்பந்தம் எட்டப்பட்டதை பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றுள்ளார்.
இது குறித்து பிரதமர் மோடி வழியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “மேற்கு ஆசிய போரை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து அமெரிக்கா – ஈரான் இடையே புரிந்துணர்வு எட்டப்பட்டதை நான் வரவேற்கிறேன். இந்த போர் உலகம் முழுவதும் பொருளாதார சீரழிவை ஏற்படுத்தியது. பல நாடுகளில் உயிரிழப்பை உண்டாக்கியது.
எனவே, இந்த ஒப்பந்தத்தின் அமலாக்கம், அந்த பிராந்தியத்தில் அமைதியையும், நிலைத்தன்மையையும் கொண்டுவர உதவுவதுடன், சுதந்திரமான கப்பல் போக்குவரத்து நடப்பதை உறுதி செய்யும் என்று இந்தியா நம்புகிறது. மீதியுள்ள பிரச்சினைகள் குறித்த பேச்சுவார்த்தை, இறுதி ஒப்பந்தத்துக்கு வழிவகுப்பதை காண ஆவலாக இருக்கிறேன்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




